தில்லி முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ஷீலா தீட்சித் (81) உடல்நலக் குறைவு காரணமாக இன்று (சனிக்கிழமை) காலமானார்.
இன்று காலை வழக்கமான மருத்துவ பரிசோதனைக்கு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஷீலா தீட்சித் இன்று பிற்பகல் 3.55 மணிக்கு உயிரிழந்ததாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
தில்லி காங்கிரஸ் தலைவராக இருக்கும் ஷீலா தீட்சித் 1938-இல் பஞ்சாப் மாநிலத்தில் பிறந்தார். காங்கிரஸ் கட்சியில் இணைந்த இவர் 1984-89 ஆகிய காலகட்டத்தில் உத்தரப் பிரதேசத்தில் போட்டியிட்டு மக்களவைக்கு தேர்வானார். அதன்பிறகு, 1986 முதல் 1989 வரை ராஜீவ் காந்தி அமைச்சரவையில் இணை அமைச்சராக செயல்பட்டார்.
அதன்பிறகு, 1998 மக்களவைத் தேர்தலில் தோல்வியடைந்த ஷீலா தீட்சித் அதே ஆண்டு தில்லி முதல்வரானார். இவர் 1998-2013 வரை தொடர்ந்து 15 ஆண்டுகள் தில்லி முதல்வராக இருந்து வந்தார்.
இதன்பிறகு, சில மாதங்கள் கேரள ஆளுநர் பொறுப்பையும் வகித்தார். தில்லி காங்கிரஸ் தலைவராக இருக்கும் ஷீலா தீட்சித் அண்மையில் நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் வடகிழக்கு தில்லி தொகுதியில் போட்டியிட்டு பாஜக வேட்பாளர் மனோஜ் திவாரியிடம் தோல்வியடைந்தார்.
இவரை எதிர்த்து போட்டியிட்டு வெற்றி பெற்ற பாஜக வேட்பாளர் மனோஜ் திவாரி, தேர்தல் முடிவுக்கு பிறகு ஷீலா தீட்சித்தை நேரில் சந்தித்து ஆசி பெற்றார். இவர், இப்படி அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களுடன் இயல்பாக பழகக்கூடியவர்.
மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி கடுமையான தோல்வியைச் சந்தித்தையடுத்து, தில்லி காங்கிரஸில் அதிரடியான சில முடிவுகளை இவர் எடுத்து வந்தார். இவரது அதிரடியான முடிவுகளுக்கு கட்சிக்குள் சில எதிர்ப்புகளும் கிளம்பியது.
இந்த இக்கட்டான நிலையில் ஷீலா தீட்சித் இன்று காலமானார்.