ஆந்திரம், சத்தீஸ்கருக்கு புதிய ஆளுநர்கள் நியமனம்
ஆந்திர மாநில ஆளுநராக பாஜக மூத்த தலைவர் விஸ்வ பூஷண் ஹரிசந்தன், சத்தீஸ்கர் மாநில ஆளுநராக மாநிலங்களவை பாஜக உறுப்பினர் அனுசுயா உய்க்கே ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். இதுதொடர்பான அதிகாரப்பூர்வ உத்தரவை, குடியரசுத் தலைவர் மாளிகை வெளியிட்டுள்ளது.
சத்தீஸ்கர் மாநில ஆளுநராக இருந்த பல்ராம்தாஸ் டாண்டன், கடந்த ஆண்டு ஆகஸ்டில் காலமானார். இதையடுத்து, அந்த மாநில ஆளுநர் பொறுப்பை, மத்தியப் பிரதேச ஆளுநர் ஆனந்திபென் படேல் கூடுதலாக கவனித்து வந்தார்.
இந்நிலையில், சத்தீஸ்கர் மாநில ஆளுநராக அனுசுயா உய்க்கே (62) நியமிக்கப்பட்டுள்ளார். மத்தியப் பிரதேச மாநிலம், சிந்த்வாராவைச் சேர்ந்தவரான இவர், மாநிலங்களவை பாஜக உறுப்பினராக உள்ளார். இவரது பதவி பதவிக்காலம் 2022-ஆம் ஆண்டு வரை உள்ள நிலையில், தற்போது ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார். பழங்குடியின பெண்களின் நலன்கள் மற்றும் உரிமைகளுக்காக, அனுசுயா உய்க்கே ஆற்றிய பணிகள் குறிப்பிடத்தக்கவையாகும்.
ஆந்திர மாநில ஆளுநராக கடந்த 10 ஆண்டுகளாக ஈ.எஸ்.எல்.நரசிம்மன் பதவி வகித்து வந்தார். தற்போது, அவரது இடத்தில் பாஜக மூத்த தலைவர் விஸ்வ பூஷண் ஹரிசந்தன் நியமிக்கப்பட்டுள்ளார். இவர், ஆந்திரத்தின் 23-ஆவது ஆளுநர் ஆவார்.
80 வயதை கடந்தவரான ஹரிசந்தன், கடந்த 1971-இல் பாரதிய ஜன சங்கத்தில் இணைந்தார். பின்னர், பாஜகவில் பல்வேறு உயர் பொறுப்புகளையும் வகித்தார்.