பாபர் மசூதி இடிப்பு வழக்கு: கூடுதல் கால அவகாசம் கோருகிறார் சிறப்பு நீதிபதி

பாபர் மசூதி இடிப்பு வழக்கில் பாஜக மூத்த தலைவர்கள் அத்வானி, முரளி மனோகர் ஜோஷி உள்ளிட்டோர் மீது விசாரணை நடத்த மேலும் 6 மாதங்கள் கால அவகாசம் அளிக்க சிபிஐ சிறப்பு நீதிபதி கோரியுள்ளார். 

பாபர் மசூதி இடிப்பு வழக்கில் பாஜக மூத்த தலைவர்கள் அத்வானி, முரளி மனோகர் ஜோஷி உள்ளிட்டோர் மீது விசாரணை நடத்த மேலும் 6 மாதங்கள் கால அவகாசம் அளிக்க சிபிஐ சிறப்பு நீதிபதி கோரியுள்ளார். 
உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியிலிருந்த பாபர் மசூதி கடந்த 1992-ஆம் ஆண்டு டிசம்பர் 6-ஆம் தேதி இடிக்கப்பட்டது. இந்தச் சம்பவம் தொடர்பாக, பாஜக மூத்த தலைவர்கள் அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமா பாரதி, உத்தரப் பிரதேசத்தின் அப்போதைய முதல்வர் கல்யாண் சிங் உள்ளிட்டோர் மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தது.
இச்சம்பவம் நிகழ்ந்து 25 ஆண்டுகளைக் கடந்துவிட்ட போதிலும், விசாரணை முடிவுக்கு வராத காரணத்தினால், வழக்கில் விரைந்து நீதி கிடைக்கச் செய்யும் நோக்கில், வழக்கை தினந்தோறும் விசாரித்து இரண்டு ஆண்டுகளில் விசாரணையை முடிக்க வேண்டும் எனக் கடந்த 2017-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இதையடுத்து, வழக்கின் விசாரணை உத்தரப் பிரதேசத் தலைநகர் லக்னெளவிலுள்ள சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. உச்சநீதிமன்றம் அளித்த காலஅவகாசம் கடந்த ஏப்ரல் மாதம் நிறைவடைந்த நிலையில், சிபிஐ சிறப்பு நீதிபதி உச்சநீதிமன்றத்துக்குக் கடந்த மே மாதம் கடிதம் ஒன்றை எழுதியிருந்தார். அதில், வரும் செப்டம்பர் மாதம் 30-ஆம் தேதியுடன், தன்னுடைய பணிக்காலம் முடிவுக்கு வர இருப்பதாக அவர் குறிப்பிட்டிருந்தார்.
இந்த விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஆர்.எஃப்.நாரிமன், சூர்ய காந்த் ஆகியோர் அடங்கிய அமர்வு திங்கள்கிழமை விசாரணை நடத்தியது. அப்போது, பாபர் மசூதி இடிப்பு வழக்கின் விசாரணையை நிறைவுசெய்ய மேலும் 6 மாதங்கள் அவகாசம் அளிக்குமாறு சிபிஐ சிறப்பு நீதிபதி தரப்பில் கோரப்பட்டது. 
இதையடுத்து, வழக்கை விசாரித்து தீர்ப்பளிக்கும் வரை, சிபிஐ சிறப்பு நீதிபதிக்குப் பணிநீட்டிப்பு வழங்குவது தொடர்பான சட்டவிதிகளைக் கண்டறிந்து, வரும் 19-ஆம் தேதிக்குள் பதிலளிக்குமாறு உத்தரப் பிரதேச அரசுக்கு நீதிபதிகள் அமர்வு உத்தரவிட்டது. அதன் பிறகு, வழக்கு விசாரணைக்குக் கூடுதல் அவகாசம் அளிப்பது குறித்து முடிவெடுக்கப்படும் எனவும் நீதிபதிகள் தெரிவித்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com