ரோஸ்வேலி நிறுவன மோசடி தொடர்பான வழக்கில் வங்க மொழியில் பிரபல நடிகையான ரிதுபர்ணா சென்குப்தாவுக்கு அடுத்த வாரம் நேரில் ஆஜராகக்கோரி அமலாக்கத் துறை புதன்கிழமை அழைப்பாணை (சம்மன்) அனுப்பியுள்ளது.
முன்னதாக, இதே வழக்கில் இன்னொரு நடிகர் பிரோசென்ஜித் சாட்டர்ஜிக்கு அமலாக்கத் துறை செவ்வாய்க்கிழமை சம்மன் அனுப்பியது. அந்த சம்மனில் வரும் 19ஆம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என்று சாட்டர்ஜிக்கு அமலாக்கத் துறை உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில் நடிகை ரிதுபர்ணா சென்குப்தாவுக்கும் அமலாக்கத் துறை தற்போது சம்மன் அனுப்பியுள்ளது. இதுகுறித்து ரிதுபர்ணா சென்குப்தாவின் பதிலை அறிந்து கொள்வதற்கு அவரின் செல்லிடப்பேசி எண்ணுக்கு பலமுறை செய்தியாளர்கள் அழைப்பு மேற்கொண்டனர். ஆனால் அந்த முயற்சிக்கு எந்தப் பயனும் கிடைக்கவில்லை.