பன்றிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டு தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா சிகிச்சை முடிந்து ஞாயிற்றுக்கிழமை வீடு திரும்பினார்.
பாஜக தேசியத் தலைவர் அமித் ஷாவுக்கு கடந்த புதன்கிழமை திடீரென மூச்சு விடுதலில் சிரமமும், நெஞ்சு வலியும் ஏற்பட்டது.
இதைத் தொடர்ந்து தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். அங்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் அவருக்கு பன்றிக் காய்ச்சல் இருப்பது தெரிய வந்தது.
இதைத் தொடர்ந்து, தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அமித் ஷாவுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த சிகிச்சையில், அமித் ஷாவின் உடல்நிலை சீராகி இயல்பு நிலைக்கு திரும்பியது. இதைத் தொடர்ந்து, தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் இருந்து அமித் ஷா ஞாயிற்றுக்கிழமை வீடு திரும்பினார். இதுகுறித்து எய்ம்ஸ் மருத்துவமனை அதிகாரி ஒருவர் கூறுகையில், "பன்றிக் காய்ச்சலில் இருந்து குணமடைந்ததைத் தொடர்ந்து, எய்ம்ஸ் மருத்துவமனையில் இருந்து அமித் ஷா காலை 10.20 மணிக்கு வீடு திரும்பினார்' என்றார்.
சுட்டுரை சமூகவலைதளத்தில் அமித் ஷா வெளியிட்டுள்ள பதிவுகளில், தாம் பூரண குணமடைந்து விட்டதாக குறிப்பிட்டுள்ளார். மேலும் அந்தப் பதிவுகளில், "கடவுளின் கருணையால், நான் முழுவதும் குணமடைந்து விட்டேன். தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் இருந்து வீட்டுக்கு திரும்பி விட்டேன்.
எனது உடல்நிலை சரியாக வாழ்த்து தெரிவித்த மக்கள் அனைவருக்கும் எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன்' எனக் குறிப்பிட்டுள்ளார்.