உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல்களாக மூத்த வழக்குரைஞர்கள் சஞ்சய் ஜெயின், கே.எம்.நடராஜ் ஆகியோரை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நியமனம் செய்துள்ளார்.
இது தொடர்பான அறிவிப்பாணை செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்டது. அதில், சஞ்சய் ஜெயின், கே.எம். நடராஜ் ஆகிய இருவரும் வரும் 2020 ஜூன் 30-ஆம் தேதி வரையிலோ அல்லது இது தொடர்பான மறு அறிவிப்பு வரும் வரையிலோ, அந்தப் பொறுப்பில் இருப்பார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, கடந்த 2015-ஆம் ஆண்டு தென் பிராந்தியத்துக்கான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரலாக கே.எம். நடராஜ் நியமிக்கப்பட்டிருந்தார். சஞ்சய் ஜெயின், கடந்த 2014-ஆம் ஆண்டு தில்லி உயர்நீதிமன்ற கூடுதல் சொலிசிட்டர் ஜெனரலாக நியமிக்கப்பட்டார். எனினும், அவர் தனது பதவியை பின்னர் ராஜிநாமா செய்துவிட்டார்.
முன்னதாக கடந்த மாதம், மூத்த பெண் வழக்குரைஞர் மகாதேவி கோராதியா திவாண் உச்சநீதிமன்றத்தில் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரலாக நியமிக்கப்பட்டார். பாஜக கூட்டணி ஆட்சி அமைந்த பிறகு இதுவரை மூன்று பெண்கள் இப்பொறுப்புக்கு நியமிக்கப்பட்டுள்ளனர். பிங்கி ஆனந்த், மணீந்தர் ஆச்சார்யா ஆகியோர் மற்ற இருவராவர்.