மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களில் பயன்படுத்தப்படும் மென்பொருள் குறித்து ஆய்வு செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்ட பொது நல மனுக்களுக்கு மார்ச் 1ஆம் தேதிக்குள் பதில் அளிக்குமாறு தேர்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
சுனில் அஷ்யா, ரமேஷ் பெல்லம்கொண்டா ஆகிய இரண்டு சமூக ஆர்வலர்கள் இதுதொடர்பாக பொதுநல மனுக்களைத் தாக்கல் செய்தனர்.
அதில், மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள், யாருக்கு வாக்களித்தோம் என்பதை அறிய உதவும் வாக்கு ஒப்புகைச் சீட்டு இயந்திரங்கள் (விவிபிஏடி), ஈடிஎஸ் இயந்திரங்கள் ஆகியவற்றில் பயன்படுத்தப்படும் மென்பொருள் குறித்த தகவல்களையும், அது எவ்வாறு செயல்படுகிறது என்பதையும் சமர்ப்பிக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய், நீதிபதி சஞ்சீவ் கன்னா ஆகியோர் அடங்கிய அமர்வு முன் 2 பொது நல மனுக்கள் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தன.
அப்போது, இந்த மனுக்களுக்கு வரும் 1ஆம் தேதிக்குள் பதிலளிக்குமாறு தேர்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.