உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்ற நீதிபதிகள் நியமனத்தை மத்திய அரசு தாமதம் செய்யவில்லை என்று உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது.
கொலீஜியம் பரிந்துரைப்படி உடனடியாக நீதிபதிகளை நியமிக்காமல், மத்திய அரசு வேண்டுமென்றே தாமதித்து வருகிறது என்று குற்றம்சாட்டி அரசுசாரா தொண்டு நிறுவனம் ஒன்றின் சார்பில் உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய், நீதிபதி சஞ்சீவ் கன்னா ஆகியோர் தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது தலைமை நீதிபதி கோகோய் கூறியதாவது:
நீதிபதிகள் நியமனங்கள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக நான் இதை உங்களுக்கு கூறுகிறேன். நியமனம் தொடர்பாக நிலுவைகள் இருந்தால் அது கொலீஜியத்திடம்தான் அதிகம் உள்ளதே தவிர, மத்திய அரசிடம் இல்லை. முக்கியமாக உயர்நீதிமன்ற நீதிபதிகள் நியமனம் தொடர்பான உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான கொலீஜியம்தான் அதிக நிலுவைகளை வைத்துள்ளன. இதனை எண்ணிக்கையாகக் கூற வேண்டும் என்றால் மத்திய அரசு 27 நியமனங்களை நிலுவையில் வைத்துள்ளது. அதே நேரத்தில் கொலீஜியத்திடம் 70 முதல் 80 நியமனங்கள் நிலுவையில் உள்ளன. எனவே இது தொடர்பாக மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப முடியாது என்றார் அவர்.