திருமலைக்கு அலிபிரியில் இருந்து தொடங்கும் நடைபாதை வழியாக நடந்து சென்று, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, ஏழுமலையானை வெள்ளிக்கிழமை தரிசனம் செய்தார்.
திருப்பதியில் காங்கிரஸ் கட்சியின் பொதுக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக அவர் தனி விமானம் மூலம் வெள்ளிக்கிழமை வந்தார்.
அவரை கட்சித் தலைவர்கள் வரவேற்றனர். அதன்பின் அலிபிரி நடைபாதை வழியாக நடந்து அவர் திருமலையை அடைந்தார். நடைபாதையில் சென்ற பக்தர்களுடன் உரையாடியபடி நடந்து சென்று அவர் சுமார் இரண்டு மணி நேரத்தில் திருமலையை அடைந்தார்.
காளி கோபுரம் பகுதியில் தனது ஆதார் அட்டையை அளித்து அவர் தரிசன டோக்கனை பெற்றுக் கொண்டார்.
திருமலையில் உள்ள ஸ்ரீகிருஷ்ணா விருந்தினர் மாளிகையில் ராகுல் காந்தியை தேவஸ்தான அதிகாரிகள் வரவேற்று தரிசன ஏற்பாடுகள் செய்தனர்.
சிறிது நேர ஓய்விற்கு பின் அவர் மாலை 3 மணிக்கு வைகுண்டம் காத்திருப்பு அறை வழியாக ஏழுமலையானை தரிசிக்கச் சென்றார். தரிசனம் முடித்து திரும்பிய அவருக்கு தேவஸ்தான அதிகாரிகள் ரங்கநாயகர் மண்டபத்தில் ஏழுமலையான் பிரசாதங்கள், சுவாமி படம் உள்ளிட்டவற்றை வழங்கினர்.
அதன் பின் அவர் காங்கிரஸ் பொதுக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக கீழ் திருப்பதிக்குப் புறப்பட்டுச் சென்றார்.
பாதுகாப்பு அதிகாரிகள் புடைசூழ: ராகுல் காந்திக்கு நடைபாதை வழியில் பாதுகாப்பு அளிக்க காவல்துறை மறுத்து விட்டது. எனினும், தனது பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் காங்கிரஸ் தொண்டர்கள் புடைசூழ அவர் நடைபாதை வழியாக நடந்து சென்றார். அவர் 10 ஆண்டுகளுக்குப் பின் திருமலைக்கு வந்து ஏழுமலையானை தரிசனம் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.