கேரள மாநிலம், காசர்கோடு மாவட்டத்தில் இளைஞர் காங்கிரஸார் இருவர் கொல்லப்பட்ட வழக்கில் குற்றவாளிகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாநில முதல்வர் பினராயி விஜயன் கூறினார்.
காசர்கோடு மாவட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட கமிட்டிக்கான புதிய அலுவலகத்தின் அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. அதில் கலந்துகொண்ட முதல்வர் பினராயி விஜயன், கட்சியினரிடையே பேசியதாவது:
இளைஞர் காங்கிரஸ் தொண்டர்கள் இருவர் கொலை செய்யப்பட்டது கொடிய செயலாகும். அதில் தொடர்புடையவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
அந்தக் கொலை வழக்கில் தொடர்புடையவர்களை பாதுகாக்க வேண்டிய தேவையே இல்லை.
அந்தக் கொலை சம்பவத்துக்குப் பிறகு, காங்கிரஸ் கட்சியினர் வன்முறையில் ஈடுபடுவதற்காக உரிமம் பெற்றதைப் போல செயல்பட்டனர். காங்கிரஸ் தொண்டர்கள் நடத்திய வன்முறைக்கு எதிராக எவரும் குரல் கொடுக்கவில்லை. ஆனால் சட்டம் தனது கடமையைச் செய்யும். தவறு செய்தவர்கள் தண்டிக்கப்படுவார்கள்.
இடதுசாரி கட்சிகளுக்கு எதிராக துவேஷத்தைப் பரப்பும் வகையில் பல்வேறு சக்திகள் செயல்பட்டு வருகின்றன. இடதுசாரி தொண்டர்களுக்கு எதிராக ஏதேனும் வன்முறை நிகழ்ந்தால், அவர்களுக்கு அது தேவை என பலர் எண்ணுகின்றனர். உண்மையில், சில ஊடகங்கள் கூட அவ்வாறு நினைக்கின்றன என்று பினராயி விஜயன் பேசினார்.