ஐஎன்எக்ஸ் மீடியா ஊழல்: ப.சிதம்பரத்துக்கு எதிராக விரைவில் சிபிஐ குற்றப்பத்திரிகை
ஐஎன்எக்ஸ் மீடியா ஊழல் வழக்கில், முன்னாள் மத்திய நிதியமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரத்துக்கு எதிராக விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என்று சிபிஐ அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதுகுறித்து அவர்கள் மேலும் கூறுகையில், ப.சிதம்பரத்துக்கு எதிராக குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்ய மத்திய அரசிடம் இருந்து ஒப்புதல் கிடைக்கப் பெற்றது.
விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்றனர்.
மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு ஆட்சியில் இருந்தபோது நிதியமைச்சராக இருந்த ப. சிதம்பரம், ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனத்துக்கு வெளிநாட்டில் இருந்து ரூ.305 கோடி நிதி பெற அந்நிய நேரடி முதலீட்டு ஊக்குவிப்பு வாரிய ஒப்புதலை அளித்ததாகத் தெரிகிறது.
இதில் முறைகேடுகள் நடைபெற்றிருப்பதாக குற்றம்சாட்டி, ப. சிதம்பரம் உள்ளிட்டோர் மீது சிபிஐ கடந்த 2017ஆம் ஆண்டு மே மாதம் 15ஆம் தேதி வழக்குப்பதிவு செய்தது. இதையடுத்து, அமலாக்கத் துறையும் கடந்த 2018ஆம் ஆண்டு வழக்குப்பதிவு செய்தது.
இதேபோல், ஏர்செல்-மேக்சிஸ் நிறுவன விவகாரத்திலும் சிதம்பரம் உள்ளிட்டோருக்கு எதிராக சிபிஐயும், அமலாக்கத் துறையும் வழக்குப்பதிவு செய்துள்ளன.
இந்த வழக்கில் சிதம்பரத்துக்கு எதிராக சட்டரீதியில் நடவடிக்கை எடுப்பதற்கு சிபிஐக்கு மத்திய அரசு அனுமதியளித்துள்ளது.
எம்.பி.யாக சிதம்பரம் பொறுப்பு வகித்து வருவதால் அவருக்கு எதிராக குற்றச்சாட்டு பதிவு செய்ய மத்திய அரசின் முன் அனுமதியை பெற வேண்டியது அவசியம்.