புது தில்லி: மும்பையில் உள்ள ஏர் இந்தியா நிறுவனத்துக்கு, விமானத்தைக் கடத்தப் போவதாக மர்ம நபர்கள் மிரட்டல் விடுத்ததை அடுத்து, அனைத்து விமான நிலையங்களும் உச்ச கட்ட பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளன.
நாட்டில் உள்ள அனைத்து விமான நிலையங்களிலும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ள துணை ராணுவப் படையினர், பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் தீவிரக் கண்காணிப்பில் ஈடுபடுமாறு விமானப் போக்குவரத்துக்கான பாதுகாப்பு அமைப்பு உத்தரவிட்டுள்ளது.
மும்பை விமான நிலையத்தின் கட்டுப்பாட்டு நிலைய அதிகாரிக்கு இன்று தொலைபேசி வாயிலாகக் கிடைத்த தகவலில், இந்திய ஏர்லைன்ஸ் விமானம் பாகிஸ்தானுக்கு கடத்தப்படும் என்று மிரட்டல் விடுக்கப்பட்டிருந்தது.
இந்த மிரட்டலை அடுத்து, இந்தியாவில் இருந்து புறப்படும் அனைத்து விமானங்களும் முக்கியமான 8 பாதுகாப்பு விஷயங்களை கடைபிடிக்குமாறு அறிவுறுத்தப்பட்டன.
அதாவது, விமான நிலையங்களுக்குள் பார்வையாளர்களை அனுமதிப்பதில் கட்டுப்பாடு, வாகனங்களை தீவிர சோதனைக்குப் பிறகே அனுமதிப்பது, முக்கிய நுழைவு வாயிலிலேயே அனைத்து பயணிகளும் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்படுவது உட்பட முக்கியமான பாதுகாப்பு அம்சங்கள் அனைத்தும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.