பயங்கரவாதிகளுக்கு ஆதரவளிப்பதையும், அவர்களுக்குப் புகலிடம் அளிப்பதையும் உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டுமென பாகிஸ்தானை அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது.
ஜம்மு-காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் வியாழக்கிழமை நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலுக்கும் அமெரிக்கா கண்டனம் தெரிவித்துள்ளது.
பாகிஸ்தானிலிருந்து செயல்பட்டு வரும் ஜெய்ஷ்-ஏ-முகமது பயங்கரவாத அமைப்பு, புல்வாமாவில் வியாழக்கிழமை நடத்திய பயங்கரவாதத் தாக்குதலில் 40 பாதுகாப்புப் படை வீரர்கள் உயிரிழந்தனர். இத்தாக்குதலில் படுகாயமடைந்த மேலும் பல வீரர்கள் மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இத்தாக்குதலுக்குக் கடும் கண்டனம் தெரிவித்து, அமெரிக்க வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் சாரா சாண்டர்ஸ் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:
புல்வாமாவில் மிகவும் கொடூரமான முறையில் பயங்கரவாதத் தாக்குதல் நிகழ்த்தப்பட்டுள்ளது. இத்தாக்குதலில் உயிரிழந்த பாதுகாப்புப் படையினரின் குடும்பங்களுக்கும், இந்திய அரசுக்கும், மக்களுக்கும் எங்களது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம். பயங்கரவாதத்தை அழிப்பதற்கான போராட்டத்தில் இந்தியாவும், அமெரிக்காவும் ஒத்துழைப்புடன் செயல்பட்டு வருகின்றன. புல்வாமாவில் நிகழ்த்தப்பட்ட இத்தாக்குதலால், இரு நாடுகளுக்கிடையேயான இந்த ஒத்துழைப்பு மேலும் அதிகரிக்கும்.
பயங்கரவாதத்துக்கு பாகிஸ்தான் தொடர்ந்து ஆதரவளித்து வருவதால், அந்நாட்டைச் சுற்றியுள்ள பிராந்தியம் முழுவதிலும் பிரச்னைகளும், வன்முறைகளும், பயங்கரவாதமும் அதிகரித்துக் காணப்படுகின்றன. எனவே, பயங்கரவாதிகளுக்கு ஆதரவளிக்கும் நிலைப்பாட்டையும், அவர்களுக்குப் பாதுகாப்பான புகலிடம் அளிப்பதையும் பாகிஸ்தான் உடனடியாக நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
புல்வாமா பயங்கரவாதத் தாக்குதலுக்கு ஐம்பதுக்கும் மேற்பட்ட அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் கண்டனம் தெரிவித்தனர். இத்தாக்குதலில் ஈடுபட்ட ஜெய்ஷ்-ஏ-முகமது பயங்கரவாத அமைப்பின் மீதும், அந்த அமைப்புக்கு நிதியுதவி, பொருளுதவி அளித்தவர்கள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தினர்.