ஜம்மு சிறையில் அடைத்து வைக்கப்பட்டுள்ள லஷ்கர்-ஏ-தொய்பா பயங்கரவாதி ஜாகித் ஃபரூக்கை தில்லி சிறைக்கு மாற்றக் கோரி உச்சநீதிமன்றத்தில் ஜம்மு-காஷ்மீர் மாநில அரசு மனு தாக்கல் செய்துள்ளது.
இதுகுறித்து அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:
காஷ்மீரில் கடந்த 2016-ஆம் ஆண்டு மே மாதம், எல்லை தாண்டி வர முயன்றதாகக் கைது செய்யப்பட்ட ஜாகித் ஃபரூக், ஜம்முவில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரும், அதே சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஜெய்ஷ்-ஏ-முகமது பயங்கவாத அமைப்பினரும், பிற கைதிகளை மூளைச்சலவை செய்து, பயங்கரவாத தாக்குதல்களை நிகழ்த்துவதற்கு சதித் திட்டம் தீட்டி வருவதாக ரகசியத் தகவல்கள் கிடைத்துள்ளன.
எனவே, நாட்டின் நலன் கருதி ஜாகித் ஃபரூக்கை தில்லி திகார் சிறைக்கு மாற்ற வேண்டும் என்று அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மனு, உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் எல்.நாகேஸ்வரராவ், எம்.ஆர்.ஷா ஆகியோர் அடங்கிய அமர்வு முன் வெள்ளிக்கிழமை பரிசீலனைக்கு வந்தது.
மனுவை விசாரணைக்கு ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், இது தொடர்பாக மத்திய அரசு 4 வாரங்களில் பதிலளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.