சென்னை: மதச்சார்பற்ற கட்சிகளிடையே ஒற்றுமையும் ஒருங்கிணைப்பும் அவசியம் என்று ஜார்கண்ட் முதல்வராக ஹேமந்த் சோரன் பதவியேற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
ஜார்க்கண்ட் மாநிலத்தின் 11-வது முதல்வராக ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சாவின் (ஜேஎம்எம்) செயல் தலைவர் ஹேமந்த் சோரன் இன்று (ஞாயிற்றுக்கிழமை) பதவியேற்றார்.
இந்தப் பதவியேற்பு விழாவில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட், இந்தியக் கம்யூனிஸ்ட் பொதுச்செயலாளர் டி. ராஜா, ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி யாதவ், திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் உட்பட பல்வேறு அரசியல் தலைவர்கள் பங்கேற்றனர்.
இந்நிலையில் மதச்சார்பற்ற கட்சிகளிடையே ஒற்றுமையும் ஒருங்கிணைப்பும் அவசியம் என்று ஜார்கண்ட் முதல்வராக ஹேமந்த் சோரன் பதவியேற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக ஞாயிறன்று அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:
திரு. ஹேமந்த் சோரனின் பதவியேற்பு விழாவில் பங்கேற்றதை மதிப்புமிகு நிகழ்வாக கருதுகிறேன்.
தேசிய குடியுரிமைத் திருத்தச் சட்டம், தேசியக் குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகைப் பதிவேடு ஆகியவற்றை எதிர்ப்பதற்கும், சமூக நீதியைப் பாதுகாப்பதற்கும் மதச்சார்பற்ற கட்சிகளிடையே ஒற்றுமையும் ஒருங்கிணைப்பும் அவசியம்.
ஜார்க்கண்டில் புதிய அரசாங்கத்தின் பதவிக்காலம் வெற்றிகரமாக அமைய வாழ்த்துக்கள்.
இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.