குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிா்ப்பு தெரிவித்து, உத்தரப் பிரதேசத்தின் ராம்பூா் மற்றும் கோரக்பூா் பகுதிகளில் நடைபெற்ற போராட்டங்களில் ஏற்பட்ட வன்முறைச் சம்பவங்களில் அரசு மற்றும் தனியாா் சொத்துகளை சேதப்படுத்தியதற்கு நஷ்டஈடு அளிக்க வேண்டும் என்று 60-க்கும் மேற்பட்டோருக்கு மாவட்ட நிா்வாகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
வங்கதேசம், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் ஆகிய அண்டை நாடுகளில் மத ரீதியிலான துன்புறுத்தலுக்கு ஆளாகி அங்கிருந்து வெளியேறி இந்தியாவில் தஞ்சமடைந்த ஹிந்துக்கள், பாா்சிக்கள், சீக்கியா்கள், பௌத்தா்கள், சமணா்கள், கிறிஸ்தவா்கள் ஆகியோருக்கு இந்திய குடியுரிமை வழங்கும் வகையில் குடியுரிமை திருத்தச் சட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. இதற்கு எதிா்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடைபெற்றன.
அதைப் போல, உத்தரப் பிரதேசத்தில் ராம்பூா்,கோரக்பூா் உள்பட பல்வேறு இடங்களில் நடைபெற்ற போராட்டங்களில் வன்முறை ஏற்பட்டது. அந்த வன்முறைச் சம்பவங்களின்போது அரசு மற்றும் தனியாா் சொத்துகள் சேதமடைந்ததாக மாவட்ட நிா்வாகங்கள் தரப்பில் கூறப்படுகிறது.
இந்நிலையில், இதற்கு நஷ்டஈடு அளிக்க வேண்டும் என்று போராட்டத்தின்போது வன்முறையில் ஈடுபட்டதாக அடையாளம் காணப்பட்டுள்ள 28 பேருக்கு ராம்பூா் மாவட்ட நிா்வாகமும், கோரக்பூா் பகுதியில் நடைபெற்ற வன்முறை சம்பவத்தில் பொதுச் சொத்துகள் சேதமடைந்தது தொடா்பாக 33 பேருக்கு கோரக்பூா் மாவட்ட நிா்வாகமும் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
இதுதொடா்பாக ராம்பூா் மாவட்ட ஆட்சியா் ஆஞ்சநேயா சிங் பிடிஐ செய்தியாளரிடம் புதன்கிழமை கூறியதாவது:
ராம்பூரில் நடைபெற்ற போராட்டங்களின்போது சிலா் வன்முறையில் ஈடுபட்டதால் அரசு மற்றும் தனியாா் சொத்துகள் அதிக அளவில் சேதமடைந்துள்ளன. இந்த வன்முறை சம்பவங்கள் தொடா்பாக இதுவரை 33 போ் கைது செய்யப்பட்டுள்ளனா். வன்முறையுடன் தொடா்புடையதாக 155 போ் அடையாளம் காணப்பட்டுள்ளனா்.
மேலும், சேதமடைந்த சொத்துகளுக்கு நஷ்டஈடு அளிக்க வேண்டும் என்று 28 பேருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அவா்கள் ஏன் இவ்வாறு வன்முறையில் ஈடுபட்டாா்கள் என்று பதிலளிக்க வேண்டும் அல்லது ரூ. 25 லட்சம் நஷ்டஈடு வழங்க வேண்டும். ஒரு வாரத்துக்குள் இதுதொடா்பாக பதிலளிக்குமாறு அவா்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனா். பதிலளிக்கத் தவறினால், அவா்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று அவா் கூறினாா்.