ஆந்திரப் பிரதேசத்தில் பேருந்து கட்டண உயர்வுக்கு எதிராக தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு தலைமையில் அக்கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
ஆந்திர மாநில போக்குவரத்துக் கழகம் பேருந்து கட்டணத்தை உயர்த்தி அறிவித்துள்ளது. இதையடுத்து, தெலுங்கு தேசம் கட்சி எம்.எல்.ஏக்கள் மற்றும் எம்.எல்.சிக்கள் கட்டண உயர்வுக்கு எதிராக இன்று ஆர்ப்பாட்ட ஊர்வலம் நடத்தினர். ஆந்திர மாநில முன்னாள் முதல்வரும், தெலுங்கு தேசம் கட்சியின் தலைவருமான சந்திரபாபு நாயுடு இதற்குத் தலைமை தாங்கினார்.
மாநிலத் தலைநகர் அமராவதி மாநில சட்டப்பேரவை அருகே நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்ட ஊர்வலத்தில் பொதுமக்களும் கலந்துகொண்டனர்.
இதற்கிடையே, கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து சந்திரபாபு நாயுடுவின் மகன் மற்றும் எம்.எல்.சியான தெலுங்கு தேசம் கட்சியின் பொதுச் செயலாளர் நர லோகேஷ், மங்களகிரியில் இருந்து தலைமைச் செயலகம் வரை பேருந்தில் பயணம் செய்தார். அவருடன் சில எம்.எல்.ஏக்களும் பேருந்தில் பயணம் செய்தனர்.