எடியூரப்பா தலைமையிலான பாஜக அரசு கவிழ்வது தவிர்க்க முடியாததாகும் என்று காங்கிரஸ் முன்னாள் முதல்வர் சித்தராமையா தெரிவித்தார்.
இதுகுறித்து பெலகாவியில் புதன்கிழமை செய்தியாளர்களிடம் அவர் கூறியது: கர்நாடகத்தில் தற்போது அமைந்துள்ள பாஜக அரசு, ஆபரேஷன் தாமரையால் உருவான சட்டத்துக்கு புறம்பான குழந்தையாகும். மஜத, காங்கிரஸ் எம்எல்ஏக்களை சட்ட விரோதமாக பாஜகவுக்கு இழுத்து, முதல்வர் எடியூரப்பா தலைமையில் அரசை அமைத்திருக்கிறார்கள். கடந்தாண்டு நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக அரசு அமைவதற்கு மக்கள் தீர்ப்பளிக்கவில்லை. முதல்வர் எடியூரப்பா தலைமையிலான பாஜக அரசு கவிழ்வது தவிர்க்க முடியாததாகும். எனவே, எந்த நேரத்திலும் எடியூரப்பா அரசு கவிழ்ந்து, சட்டப்பேரவைக்கு இடைக்கால தேர்தல் நடைபெறலாம். வாரத்தில் 3 நாள்கள் புதுதில்லிக்கு பறந்து கொண்டிருக்கிறார் எடியூரப்பா. பாஜக தேசியத் தலைவர் அமித்ஷாவின் ஒப்புதல் இல்லாமல் எந்த முடிவையும் எடுக்க இயலாத பரிதாப நிலையில் உள்ளார் முதல்வர் எடியூரப்பா.
சட்டப்பேரவைக்கு இடைக்கால பொதுத்தேர்தல் வந்தால், எங்களுக்கும்(காங்கிரஸ்) பாஜகவுக்கும் இடையேதான் மோதல். மஜதவுக்கும், எங்களுக்கும் மோதல் இல்லை. மதவாத கட்சிக்கு எதிராக மதச்சார்பற்ற கட்சியான காங்கிரஸ்தான் மோத முடியும். மதச்சார்பற்ற கட்சிகளான காங்கிரஸும், மஜதவும் எப்படி மோதிக்கொள்ள முடியும். மஜத தலைவர்கள் மீது எனக்கு எவ்வித வருத்தமும், காழ்ப்புணர்வும் இல்லை என்றார்.