ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில், முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தையும், நீதி ஆயோக் அமைப்பின் முன்னாள் தலைமைச் செயல் அதிகாரி சிந்துஸ்ரீ குல்லரையும் ஒன்றாக வைத்து சிபிஐ விசாரணை நடத்தியதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதுகுறித்து அதிகாரி ஒருவர் திங்கள்கிழமை கூறியதாவது:
1975-ஆம் ஆண்டைய ஐஏஎஸ் அதிகாரியான சிந்துஸ்ரீ குல்லர், ஐஎன்எக்ஸ் மீடியா சட்ட விரோதமான முறையில் வெளிநாடுகளில் இருந்து நிதியைப் பெற்றதாகக் கூறப்படும் காலகட்டத்தில் நிதித் துறை அமைச்சகத்தின் கூடுதல் செயலராக இருந்தார்.
எனவே, அவரையும், ப.சிதம்பரத்தையும் ஒரே இடத்தில் வைத்து விசாரிப்பதற்கு சிபிஐ அதிகாரிகள் விரும்பினர்.
இதற்காக, தில்லியில் உள்ள சிபிஐ தலைமையகத்துக்கு சிந்துஸ்ரீ குல்லர் திங்கள்கிழமை அதிகாலை வந்தார். அவரையும், ப.சிதம்பரத்தையும் ஒன்றாக வைத்து அதிகாரிகள் விசாரணை நடத்தினர். திங்கள்கிழமை விசாரணை முடிவடையாததால், செவ்வாய்க்கிழமையும் விசாரணைக்கு ஒத்துழைக்க அவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் அவர் மீது வழக்குப்பதிவு செய்து குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்வதற்கு சிபிஐ அனுமதி கோரியுள்ளது என்று அந்த அதிகாரி கூறினார்.