கடந்த 1992ஆம் ஆண்டு பாபர் மசூதி இடிப்பு வழக்கை விசாரித்துவரும் சிறப்பு நீதிபதியின் பதவிக் காலத்தை நீட்டித்து 2 வாரங்களுக்குள் உத்தரவிடுமாறு உத்தரப் பிரதேச அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த வழக்கை விசாரித்துவரும் சிறப்பு நீதிபதி, தனக்கு பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் என்பது உள்பட 5 கோரிக்கைகளை குறிப்பிட்டு உச்சநீதிமன்றத்துக்கு கடந்த மாதம் 27ஆம் தேதி கடிதம் எழுதியிருந்தார்.
இதை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஆர்.எஃப்.நாரிமன், சூர்ய காந்த் தலைமையிலான அமர்வு, உத்தரப் பிரதேச அரசின் சார்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர் ஐஸ்வர்யா பதியிடம், சிறப்பு நீதிபதியின் 5 கோரிக்கைகளையும் பரிசீலிக்க வேண்டும். 9 மாதங்களுக்குள் பாபர் மசூதி இடிப்பு வழக்கில் தீர்ப்பு வழங்க வேண்டும். செப்டம்பர் 30ஆம் தேதியுடன் ஓய்வு பெறவுள்ள நீதிபதி, இந்த வழக்கில் தீர்ப்பு வழங்குவதற்காகவே பதவி நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளார். இதுதொடர்பான உத்தரவை உத்தரப் பிரதேச அரசு 2 வாரங்களுக்குள் வெளியிட வேண்டும் என்று தெரிவித்தது.
பாபர் மசூதி இடிப்பு வழக்கில் பாஜக மூத்த தலைவர்கள் எல்.கே.அத்வானி, எம்.எம்.ஜோஷி, உமா பாரதி ஆகியோர் குற்றம்சாட்டப்பட்டுள்ளனர்.
இந்த வழக்கில், குற்றம்சாட்டப்பட்ட கிரிராஜ் கிஷோர், விசுவ ஹிந்து பரிஷத் அமைப்பின் தலைவர் அசோக் சிங்கல், விஷ்ணு ஹரி டால்மியா ஆகியோர் விசாரணையின்போது உயிரிழந்துவிட்டனர்.