புது தில்லி: ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் சிதம்பரம் கைது செய்யப்பட்டு சிபிஐ காவலில் வைக்கப்பட்டிருப்பதால், அவரது முன் ஜாமீன் மனுவை திங்கட்கிழமைக்கு உச்ச நீதிமன்றம் ஒத்திவைத்தது.
முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரத்தின் முன் ஜாமீன் மனு தில்லி உயர் நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டதால், உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
இந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க மறுத்துவிட்ட உச்ச நீதிமன்றம், வெள்ளிக்கிழமை விசாரிப்பதாகப் பட்டியலிட்டிருந்தது. அதே சமயம், புதன்கிழமை இரவு சிதம்பரம் சிபிஐ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.
இன்று இந்த மனு விசாரணைக்கு வந்த போது, ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் கைது செய்யப்பட்ட சிதம்பரத்துக்கு ஆகஸ்ட் 26ம் தேதி வரை சிபிஐ சிறப்பு நீதிமன்றம் சிபிஐ காவல் பிறப்பித்த நிலையில், அதுவரை எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது எனக் கூறி, சிதம்பரத்தின் மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையை ஆகஸ்ட் 26ம் தேதிக்கு ஒத்திவைத்தது.