ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் அமலாக்கத் துறை கைது செய்வதில் இருந்து தப்பிக்க சிதம்பரம் தாக்கல் செய்த முன்ஜாமீன் மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், அவரை ஆகஸ்ட் 26ம் தேதி வரை கைது செய்ய இடைக்காலத் தடை விதித்துள்ளது.
உச்ச நீதிமன்றத்தில் அமலாக்கத்துறைக்கு எதிராக சிதம்பரம் சார்பில் தாக்கல் செய்த மனு இன்று விசாரணைக்கு வந்த போது, சிதம்பரம் தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர் கபில் சிபல், அமலாக்கத் துறை அளித்த வாதங்களை அப்படியே தில்லி நீதிமன்றம் கட் அன்ட் பேஸ்ட் செய்துவிட்டது. நீதிமன்றங்கள் இவ்வாறு செய்தால் எங்கு சென்று நாங்கள் நிவாரணம் பெறுவது? அதுவும் இந்த உத்தரவை தில்லி உயர் நீதிமன்றம் 7 மாதங்களுக்குப் பிறகு பிறப்பித்துள்ளது என்று வாதிட்டார்.
வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், ப. சிதம்பரத்தை ஆகஸ்ட் 26ம் தேதி வரை கைது செய்ய அமலாக்கத் துறைக்குத் தடை விதித்து, விசாரணையை திங்கட்கிழமைக்கு ஒத்தி வைத்தார்.
ஏற்கனவே சிபிஐக்கு எதிராக சிதம்பரம் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட முன் ஜாமீன் மனுவையும் உச்ச நீதிமன்றம் திங்கட்கிழமைக்கு ஒத்தி வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.