உத்தரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த ஒருவர் வங்கியில் கடன் கேட்டு கிடைக்காததால் தனது கிட்னியை விற்க முன்வந்துள்ள அவலநிலை ஏற்பட்டுள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலத்தில் சஹாரன்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த ராம் குமார் என்பவர் ஒரு விவசாயி. இவர், பிரதான் மந்திரி கவுசல் விகாஸ் யோஜனா திட்டத்தின் கீழ், பால் பண்ணை குறித்து பயின்று அதற்கானச் சான்றிதழும் பெற்றுள்ளார். தொடர்ந்து, அருகில் உள்ள வங்கியில் தனியே பால் பண்ணை தொடங்குவதற்கு கடன் கேட்டு விண்ணப்பித்துள்ளார். ஆனால், அவருக்கு வங்கியில் கடன் கிடைக்கவில்லை.
பின்னர், வேறு வழியின்றி உறவினர்களிடம் கடன் வாங்கி தனியாக பால் பண்ணை ஒன்றை வைத்துள்ளார். சில ஆடுகளையும் வாங்கி பராமரித்து வந்தார். ஆனால், எதிர்பார்த்த அளவு அதில் வருமானம் கிடைக்கவில்லை. உறவினர்கள் பணம் கேட்க ஆரம்பித்தனர்.
இதற்கிடையே, அவர் பல்வேறு வங்கிகளில் கடன் கேட்டு விண்ணப்பித்தார். அதுவும் வெற்றி பெறாத சமயத்தில், வேறு வழியில்லாமல் தனது கிட்னியை விற்க முன்வந்துள்ளார். இதுகுறித்து அவர் சுவரொட்டி விளம்பரமும் வெளியிட்டுள்ளார். தான் தனது கிட்னியை விற்கத் தயாராக இருப்பதாகவும், விருப்பமுள்ளவர்கள் தொடர்பு கொள்ளலாம் என்றும் சுவரொட்டியில் குறிப்பிட்டுள்ளார்.
இதையறிந்த காவல்துறையினர், ராம் குமாரிடம் வந்து விசாரணை நடத்தினர். மேற்குறிப்பிட்ட அனைத்து விபரங்களையும் ராம் குமார் போலீசாரிடம் கூறியுள்ளார்.
பின்னர் சஹாரன்பூர் கமிஷனர் சஞ்சய் குமார் கூறுகையில், 'ராம் குமார் வங்கியில் கடன் கேட்டு கிடைக்காதது தற்போது தான் தெரிய வந்துள்ளது. அதுமட்டுமின்றி, கிட்னியை விற்பது சட்டப்படி குற்றம் என்று அவருக்கு தெரியவில்லை. அதுகுறித்து நாங்கள் அவருக்கு விளக்கமளித்துள்ளோம். மேலும், அவர் விண்ணப்பத்த வங்கிகளில் அவருக்கு என்ன காரணத்தினால் கடன் மறுக்கப்பட்டது என்பது குறித்து விசாரித்து தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும்' என்று தெரிவித்தார்.