புதுச்சேரி ஆளுநரின் அதிகார வழக்கு: தனி நீதிபதி உத்தரவுக்கு தடை விதிக்க மறுப்பு

புதுச்சேரி அரசின் அன்றாட நடவடிக்கைகளில் ஆளுநர் கிரண்பேடி தலையிடுவதற்கு தடை விதித்து தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. 
புதுச்சேரி ஆளுநரின் அதிகார வழக்கு: தனி நீதிபதி உத்தரவுக்கு தடை விதிக்க மறுப்பு


புதுச்சேரி அரசின் அன்றாட நடவடிக்கைகளில் ஆளுநர் கிரண்பேடி தலையிடுவதற்கு தடை விதித்து தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. 
சென்னை உயர்நீதிமன்றத்தில் புதுச்சேரி ராஜ்பவன் தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏவான லட்சுமிநாராயணன் தாக்கல் செய்த மனுவில், மத்திய அரசு கடந்த 2017-ஆம் ஆண்டு ஜனவரி மாதம், புதுச்சேரி யூனியன் பிரேதச அரசின் அன்றாட நடவடிக்கைகளில் தலையிடும் வகையிலும், அரசு ஆவணங்களைக் கோருவதற்கும் துணை நிலை ஆளுநருக்கு அதிகாரம் உள்ளதாக உத்தரவு பிறப்பித்துள்ளது. 
இந்த உத்தரவின் காரணமாக புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண் பேடி அரசின் அன்றாட நடவடிக்கைகளில் தேவையின்றி தலையிடுகிறார். 
தன்னிச்சையாக அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பிக்கிறார். அவரது செயல்பாடுகள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு எதிராக உள்ளது. 
மாநில அரசின் அதிகாரங்களை துணை நிலை ஆளுநர் கையில் எடுத்துக்கொண்டு செயல்படுகிறார்.
எனவே அரசின் அன்றாட நடவடிக்கைகளில் ஈடுபடும் வகையில் ஆளுநருக்கு அதிகாரம் அளித்து மத்திய அரசு பிறப்பித்துள்ள உத்தரவை ரத்து செய்ய வேண்டும் எனக் கோரியிருந்தார். 
இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற தனி நீதிபதி, துணை நிலை ஆளுநருக்கு அதிகாரம் அளித்து மத்திய அரசு பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து தீர்ப்பளித்தார். 
இதையடுத்து, தனி நீதிபதியின் தீர்ப்பை எதிர்த்து துணை நிலை ஆளுநர் கிரண் பேடி, உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தார். 
வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், மனு தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தை அணுக உத்தரவிட்டது. 
இதனைத் தொடர்ந்து, மத்திய அரசின் உள்துறை அமைச்சகத்தின் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. 
இந்த மேல்முறையீட்டு மனு, நீதிபதிகள் வினீத் கோத்தாரி, சி.வி.கார்த்திகேயன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. 
அப்போது மத்திய அரசு சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் அமன் லேகி, அரசியல் சாசனப் பிரிவுகளையும் விதிகளையும் கருத்தில் கொள்ளாமல் தனி நீதிபதி இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார். 
எனவே தனி நீதிபதியின் உத்தரவுக்குத் தடை விதிக்க வேண்டும் என வாதிட்டார்.
தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதிக்க மறுப்பு தெரிவித்த நீதிபதிகள், மத்திய அரசு தாக்கல் செய்துள்ள மேல்முறையீட்டு மனுவுக்கு எம்எல்ஏ லட்சுமிநாராயணன், துணை நிலை ஆளுநர் கிரண் பேடி ஆகியோர் வரும் செப்டம்பர் 4-ஆம் தேதிக்குள் பதிலளிக்க  உத்தரவிட்டு, விசாரணையை ஒத்திவைத்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com