புது தில்லி: ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு அடிப்படை ஆதாரங்களின் அடிப்படையில் நடக்கவில்லை, வேறு எதற்காகவோ நடக்கிறது என்று சிதம்பரம் தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர் அபிஷேக் சிங்வி தனது வாதத்தின் போது குறிப்பிட்டார்.
சிதம்பரத்திடம் சிபிஐ எதிர்பார்ப்பது கேள்விகளையா? பதில்களையா? என்று அபிஷேக் சிங்வி காட்டமான ஒரு கேள்வியையும் வாதத்தின் போது எழுப்பினார்.
நேற்று இரவு சிபிஐயால் கைது செய்யப்பட்ட ப. சிதம்பரம், தில்லியில் உள்ள சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்பட்டார்.
முன்னதாக சிபிஐ தரப்பில் வாதங்கள் முன் வைக்கப்பட்ட நிலையில் சிதம்பரம் தரப்பில் வாதிடப்பட்டு வருகிறது.
வழக்குரைஞர் அபிஷேக் சிங்வி கூறுகையில், இடைக்கால முன்ஜாமீனை 7 மாதங்கள் கழித்து தில்லி உயர் நீதிமன்றம் ரத்து செய்தது ஏன்? சிபிஐயின் வாதங்களை அடிப்படையிலேயே எதிர்க்கிறேன்.
ஏற்கனவே விசாரணையின் போது கேட்கப்பட்ட கேள்விகளே சிதம்பரத்திடம் மீண்டும் கேட்கப்பட்டுள்ளது.
ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில், அன்னிய முதலீட்டுக்கு அனுமதி அளித்ததில் சம்பந்தப்பட்ட 6 அரசு செயலாளர்களும் இதுவரை கைதுசெய்யப்படவில்லை என்று அபிஷேக் சிங்வி சுட்டிக்காட்டினார்.
24 மணிநேரமாக தூங்கவில்லை என்று நீதிமன்றத்தில் சிதம்பரம் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டது.
தொடர்ந்து பேசிய வழக்குரைஞர், ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் எந்த ஆதாரமும் இல்லாமல் முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரத்தைக் கைது செய்திருப்பது தவறு. நேற்றைய விசாரணையின் போது கேட்கப்பட்ட 12 கேள்விகளில் 6 கேள்விகள் ஏற்கனவே சிதம்பரம் பதிலளித்தவை.
கடந்த 11 மாதங்களில் சிபிஐ தரப்பில் எந்த சம்மனும் அனுப்பப்படவில்லை. ஆனால் சம்மன் அனுப்பியும் சிபிஐ சிதம்பரத்திடம் விசாரணை நடத்தியிருக்கலாமே? அவ்வாறு ஏன் செய்யவில்லை.
சிதம்பரத்திடம் 12 கேள்விகளை சிபிஐ அதிகாரிகள் கேட்டுள்ளனர். அதனை நீதிமன்றதில் தாக்கல் செய்ய வேண்டும் என்று அபிஷேங் சிங்வி வாதங்களை முன் வைத்தார்.