பாலாகோட் துல்லியத் தாக்குதலுக்கு முன், பாகிஸ்தானுடன் முழு அளவிலான போருக்கு இந்திய ராணுவம் தயாராக இருந்தது தற்போது தெரியவந்துள்ளது.
ஜம்மு-காஷ்மீர் மாநிலம், புல்வாமாவில் கடந்த பிப்ரவரி மாதம் 14-ஆம் தேதி சிஆர்பிஎஃப் படையினர் பயணித்த வாகனத்தைக் குறிவைத்து நிகழ்த்தப்பட்ட தற்கொலை தாக்குதலில் 40 வீரர்கள் உயிரிழந்தனர். நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கிய இத்தாக்குதலுக்கு, பாகிஸ்தானிலிருந்து செயல்படும் ஜெய்ஷ்-ஏ-முகமது பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றது. இதற்கு பதிலடியாக, பாகிஸ்தானின் பாலாகோட் பகுதியில் பிப்ரவரி 26-ஆம் தேதி அதிரடி தாக்குதல் நடத்திய இந்திய விமானப் படை, ஜெய்ஷ்-ஏ-முகமது பயங்கரவாத முகாம்களை குண்டுவீசி அழித்தது. இந்த தாக்குதலுக்கு முன், பாகிஸ்தானுடன் முழு அளவிலான போருக்கு இந்திய ராணுவம் தயாராக இருந்ததாக தற்போது தெரியவந்துள்ளது.
ஓய்வுபெறும் ராணுவ அதிகாரிகளுக்கான பிரிவு உபசாரக் கூட்டம், தில்லியில் திங்கள்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்தில், ராணுவ தலைமை தளபதி விபின் ராவத் பேசுகையில், புல்வாமா பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து, பாகிஸ்தானை தண்டிப்பதற்காக வான்வழி தாக்குதல் நடத்துவது உள்பட பல்வேறு வழிமுறைகள் ஆராயப்பட்டன. அப்போது, பாகிஸ்தானுடன் முழு அளவிலான போரில் ஈடுபட இந்திய ராணுவம் தயாராக உள்ளதாக அரசிடம் நான் தெரிவித்தேன் என்று கூறியதாக உயரதிகாரிகள் தெரிவித்தனர்.