ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளை தனிமைப்படுத்த காவல்துறையினர் முக்கியத்துவம் கொடுத்து செயல்பட்டு வருவதாக காவல்துறைத் தலைவர் தில்பாக் சிங் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக ஸ்ரீநகரில் பிடிஐ செய்தியாளருக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது:
ஜம்மு-காஷ்மீர் மக்களை பயங்கரவாதிகள் தவறாக வழிநடத்தி விடக் கூடாது என்பதை கவனத்தில் கொண்டு காவல்துறை செயல்படுகிறது. இதற்காக பயங்கரவாதிகளை தனிமைப்படுத்தும் நடவடிக்கைக்கு முக்கியத்துவம் கொடுத்து காவல்துறை பணியாற்றுகிறது.
ஜம்மு-காஷ்மீரில் காவல்துறையினர் 2 வகையான திட்டங்களை வகுத்து செயல்படுகின்றனர். அதில் ஒரு திட்டம், பயங்கரவாதிகளுக்கு எதிரான தேடுதல் நடவடிக்கையை தீவிரப்படுத்துவதாகும். இன்னொரு திட்டம், சட்டம்-ஒழுங்கு நிலையை தொடர்ந்து சீராக பராமரிப்பதாகும்.
மாநிலத்தில் சட்டம்-ஒழுங்கு நிலவரம் கைமீறிச் சென்று விடாமல் இருப்பதை காவல்துறையினர் உறுதி செய்து வருகின்றனர்.
ஜம்மு-காஷ்மீரில் கடந்த 13 நாள்களாக மிகப்பெரிய அளவிலான வன்முறைச் சம்பவங்கள் எதுவும் நடக்கவில்லை. சிறிய அளவிலான சம்பவங்கள் மட்டுமே நடந்துள்ளன. அவற்றையும் காவல்துறையினர் கட்டுக்குள் கொண்டு வந்துவிட்டனர்.
இந்த சம்பவங்களில் பொது மக்களில் சிலரும், காவல்துறையினரில் சிலரும் காயமடைந்தனர். அவர்கள் சிகிச்சை முடிந்து திரும்பி விட்டனர் என்றார் தில்பாக் சிங்.
இரவு நேரத்திலும் பாதுகாப்பு தீவிரம்: இதனிடையே, ஜம்மு-காஷ்மீரில் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ள மத்திய ரிசர்வ் போலீஸ் படையினர் உள்ளிட்ட துணை ராணுவப் படை வீரர்கள், இரவு நேரத்திலும் தீவிர பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
காஷ்மீர் பள்ளத்தாக்குப் பகுதி நெடுகிலும் பகல் நேரத்தில் கண்காணிப்புப் பணி முடிந்தாலும், இரவில் பயங்கரவாதிகள் ஊடுருவல், குண்டுவெடிப்பு தாக்குதல் சதி உள்ளிட்டவற்றை முறியடிக்கும் வகையில் படை வீரர்கள் ரோந்து சுற்றி வருகின்றனர்.