புது தில்லி: பிரான்சில் நடைபெறும் ஜி7 மாநாட்டில் பங்கேற்பதோடு மூன்று நாடுகளில் சுற்றுப்பயணம் செய்வதற்காக, தனது ஐந்து நாள் பயணத்தை பிரதமர் மோடி வரும் வியாழனன்று துவங்குகிறார்.
இதுதொடர்பாக வெளியுறவுத்துறை அமைச்சகம் திங்களன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
பிரான்சில் நடைபெறும் ஜி7 மாநாட்டில் பங்கேற்பதோடு ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் பஹ்ரைன் ஆகிய நாடுகளில் தனது ஐந்துநாள் சுற்றுப்பயணத்தை பிரதமர் மோடி வரும் 22-ஆம் தேதி வியாழனன்று துவங்குகிறார்.
பயணத்தின் முதல் கட்டமாக வியாழன் அன்று அவர் பிரான்ஸ் சென்று அதிபர் இம்மானுவேல் மக்ரோனை சந்தித்து இரு தரப்பு பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுகிறார். மறுநாள் பிரான்ஸ் வாழ் இந்திய மக்களை சந்தித்து உரையாடுகிறார்.
அன்றே அவர் அங்கிருந்து புறப்பட்டு ஐக்கிய அரபு அமீரகத்தைச் சென்றடைகிறார். மறுநாள் ஆகஸ்ட் 24-ஆம் தேதி சவுதி இளவரசர் ஷேக் முஹம்மத் பின் சயீத்தை சந்திக்கிறார். அங்கு அவருக்கு கடந்த ஏப்ரல் மாதம் அறிவிக்கப்பட்ட அந்நாட்டின் உயரிய விருதான 'ஆர்டர் ஆப் சயீத்' வழங்கப்படுகிறது
அங்கிருந்து அவர் பஹ்ரைனுக்கு புறப்பட்டுச் செல்கிறார். அந்நாட்டுக்குச் செல்லும் முதல் இந்திய பிரதமர் மோடி என்பது குறிப்பிடத்தக்கது.அங்கு அவர் அந்நாட்டின் இளவரசர் ஷைக் காலிபாவை சந்தித்து இருதரப்பு உறவு குறித்து பேச்சுவார்த்தை நடத்துகிறார்.
மறுநாள் 25-ஆம் தேதி மீண்டும் பிரான்ஸ் திரும்பும் அவர் அங்கு பையாரிட்ஸ் நகரில் நடைபெறும் 45-ஆவது ஜி 7 மாநாட்டில் பங்கேற்கிறார்.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.