முன்னாள் எம்பி-க்கள் ஒரு வார காலத்துக்குள் அரசு பங்களாவை காலி செய்ய வேண்டும் என்று மக்களவை வீட்டு வசதிக் குழு இன்று (திங்கள்கிழமை) உத்தரவிட்டது.
200-க்கும் மேற்பட்ட முன்னாள் மக்களவை உறுப்பினர்கள் அரசு பங்களாவை இதுவரை காலி செய்யவில்லை என்று பிடிஐ செய்தி நிறுவனம் நேற்று செய்தி வெளியிட்டிருந்தது. இந்த நிலையில், மக்களவை வீட்டு வசதிக் குழுக் கூட்டம் இன்று நடைபெற்றதாக தெரிகிறது. மேலும், இந்தக் கூட்டத்தில், அரசு பங்களாவை காலி செய்யுமாறு முன்னாள் எம்பி-க்களை கேட்டுக்கொண்டதாகவும் தெரிகிறது.
இந்த நிலையில், மக்களவை வீட்டு வசதிக் குழுத் தலைவர் சி.ஆர். பாட்டீல் இன்று பிடிஐ செய்தி நிறுவனத்திடம் பேசுகையில்,
"இன்று நடைபெற்ற வீட்டு வசதிக் குழுக் கூட்டத்தில், இன்னும் ஒரு வாரத்தில் அரசு பங்களாவை காலி செய்யுமாறு முன்னாள் எம்பி-க்களிடம் தெரிவிக்கப்பட்டது. மேலும், இன்னும் மூன்று தினங்களில் மின்சாரம், தண்ணீர் மற்றும் கேஸ் இணைப்புகள் உள்ளிட்டவை துண்டிக்கப்படும் என்றும் இந்தக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. எந்தவொரு எம்பியும் அரசு பங்களாவை காலி செய்ய முடியாது என்று தெரிவிக்கவில்லை" என்றார்.
முந்தைய மக்களவை கலைக்கப்பட்ட ஒரு மாத காலத்துக்குள் முன்னாள் எம்பி-க்கள் தங்களது அரசு பங்களாவை காலி செய்ய வேண்டும் என்பது விதி. மத்திய அமைச்சரவையின் பரிந்துரையை ஏற்று குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் கடந்த மே 25-ஆம் தேதி 16-வது மக்களவையை கலைத்தார். இருந்தபோதிலும், 200-க்கும் மேற்பட்ட முன்னாள் எம்பி-க்கள் அரசு பங்களாவை காலி செய்யாமல் இருந்துள்ளனர்.
இதனால், புதிதாக தேர்வான எம்பி-க்கள் தற்காலிக இடத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளதாக நம்பகத்தக்க வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.