டெல்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்திற்கு பிரதமர் மோடியின் பெயரை சூட்ட வேண்டும் என்று டெல்லி பாஜக எம்.பி ஹன்ஸ் ராஜ் ஹன்ஸ் தெரிவித்துள்ளார்.
நடந்து முடிந்த நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் டெல்லி வடமேற்கு மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் பிரபல பஞ்சாபி பாடகர் ஹன்ஸ் ராஜ் ஹன்ஸ். இவர், டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற விழாவில் கலந்து கொண்டு பேசினார்.
அப்போது, காஷ்மீர் விவகாரத்திற்கு சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டது குறித்தும் ஜம்மு காஷ்மீர் இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டது குறித்தும் பேசினார். முன்னதாக ஜம்மு காஷ்மீர் விவகாரத்தை காந்தி மற்றும் நேரு எவ்வாறு கையாண்டனர் எனவும் விமர்சித்து பேசினார். எங்களது முன்னாள் தலைவர்கள் செய்த தவறுகளை நாங்கள் எதிர்கொள்கிறோம் என்றும் கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், 'நான் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கலகத்திற்கு முதல் முறையாக வந்துள்ளேன். இந்த பல்கலைக்கழகம் குறித்து நிறைய கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால், தற்போது பல்கலைக்கழகத்தில் சில மாற்றங்களை செய்ய வேண்டியது அவசியமாகிறது. ஜவஹர்லால் நேரு பல்கலைக்கலகத்திற்கு பிரதமர் மோடியின் பெயரை சூட்ட வேண்டும். 'JNU' என்பதற்கு பதிலாக 'MNU' (Modi Narendra University) என பெயர் சூட்ட வேண்டும். எந்த ஒரு பயங்கரவாத அச்சுறுத்தலும் இல்லாத அமைதியான ஒரு வாழ்க்கையை மக்களுக்கு உறுதி செய்வோம்' என்று தெரிவித்துள்ளார்.
இந்த விழாவில் மற்றொரு பாஜக எம்.பி மனோஜ் திவாரியும் கலந்துகொண்டு பேசினார். அவர், 'பல்கலைக்கழக மாணவர்கள் நாட்டிற்கு எதிராக கோஷங்களை எழுப்பி வந்த நிலையில், தற்போது 'வந்தே மாதரம்' , 'பாரத் மாதா கி ஜே' என்று கோஷமிடுகின்றனர்.
இந்தியாவின் அடுத்த முயற்சி பாகிஸ்தான் ஆக்ரமிப்பு காஷ்மீர் பகுதியை மீட்பது தான். நான் மட்டுமல்ல, இந்த நாட்டில் உள்ள ஒவ்வொரு குழந்தைகளும் பாகிஸ்தான் ஆக்ரமிப்பு காஷ்மீர் பகுதி, இந்தியாவுடன் ஒருங்கிணைந்தது என்று தான் கூறுவார்கள்' என்று தெரிவித்தார்.