உண்மை நிலவரத்தை பார்வையிடுவதற்கு ஜம்மு-காஷ்மீருக்கு காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி வரலாம் என்று ஆளுநர் சத்ய பால் மாலிக் அழைப்பு விடுத்துள்ளார்.
தில்லியில் செய்தியாளர்களுக்கு சனிக்கிழமை இரவு பேட்டியளித்த ராகுல் காந்தி, ஜம்மு-காஷ்மீரில் வன்முறை நிலவுவதாக குற்றம்சாட்டியிருந்தார். இதுகுறித்து ஜம்முவில் ஆளுநர் சத்யபால் மாலிக்கிடம் திங்கள்கிழமை செய்தியாளர்கள் கேள்வியெழுப்பினர். அதற்கு அவர் அளித்த பதில்:
ஜம்மு-காஷ்மீரின் உண்மை நிலவரத்தை காண ராகுல் காந்தி வர வேண்டும் என அழைக்கிறேன். அவரை அழைத்து வருவதற்கு விமானத்தை அனுப்பத் தயாராக உள்ளேன். அதன்பிறகு உண்மை நிலவரத்தைப் பார்த்துவிட்டு, அவர் பேச வேண்டும் என்றார்.
இந்நிலையில் ராகுல் தனது ட்விட்டர் பக்கத்தில் சத்யபால் மாலிக் அழைப்புக்கு பதிலளித்துள்ளார். அதில்,
மதிப்புக்குரிய ஆளுநர் சத்யபால் மாலிக் அவர்களுக்கு, ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் பகுதிகளை பார்வையிட வருமாறு நீங்கள் அழைப்பு விடுத்துள்ளதை மனதார ஏற்றுக்கொள்கிறேன். நானும், எதிர்கட்சிகளைச் சேர்ந்த தலைவர்களும் அப்பகுதிகளை பார்வையிட ஆவலாக உள்ளோம்.
அதற்காக நீங்கள் எனக்கு விமானம் எதுவும் தர வேண்டாம். மாறாக, அப்பகுதி முழுவதும் சென்று பார்வையிடவும், அங்கு பணியில் ஈடுபட்டுள்ள அதிகாரிகள், ராணுவம் உள்ளிட்ட பாதுகாப்புப் படையினர் மற்றும் மக்களை சந்தித்து பேசவும் முழு சுதந்திரம் வழங்கினால் போதுமானது என்று பதிவிட்டுள்ளார்.