வயநாடு: கேரள மாநிலம் வயநாடு மக்களவைத் தொகுதியில் தங்கியிருந்து, வெள்ள பாதிப்புகளை நேரில் பார்வையிட்டு, பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறி வருகிறார் ராகுல் காந்தி.
மழை, வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் கடுமையான பாதிப்புக்குள்ளான பகுதிகளை நேரில் பார்வையிட்டு வரும் ராகுல் காந்தி தனது ஃபேஸ்புக்கில் ஒரு வேண்டுகோளை விடுத்துள்ளார்.
எனது மக்களவைத் தொகுதியான வயநாடு மழை வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. ஆயிரக்கணக்கானோர் வீடுகளை இழந்து நிவாரண முகாம்களில் தங்கியுள்ளனர்.
நிவாரண முகாம்களில் தங்கியிருக்கும் மக்களுக்கு நிவாரணப் பொருட்கள் தேவைப்படுகிறது. குடிநீர் பாட்டில்கள், பாய், படுக்கை விரிப்பு, உள்ளாடைகள், வேட்டிகள், நைட்டிகள், குழந்தைகளுக்கான பொருட்கள், செருப்பு, சானிடரி நேப்கின்ஸ், சோப்பு, பிரஷ், பேஸ்ட், டெட்டால், சோப்பு பவுடர், ப்ளீச்சிங் பவுடர், குளோரின் போன்றவை அதிகளவில் தேவைப்படுகிறது.
பிஸ்கெட், சர்க்கரை, பருப்பு, தேங்காய் எண்ணெய், தேங்காய், காய்கறிகள், மசாலா தூள்கள், ரொட்டி, குழந்தைகளுக்கான உணவுகள் போன்றவை அடிப்படைத் தேவைகளாக உள்ளன.
இதற்காக மலப்புரம் மாவட்டத்தில் அமைக்கப்பட்டிருக்கும் நிவாரணப் பொருட்கள் சேகரிப்பு மையத்துக்கு தங்களால் முடிந்த உதவிப் பொருட்களை பொதுமக்கள் அனுப்பி வைக்குமாறு ராகுல் கோரிக்கை வைத்துள்ளார்.
பாதிக்கப்பட்டிருக்கும் மக்களை பார்க்கும் போது இதயம் நொறுங்குகிறது. மாநில மற்றும் மத்திய அரசுகள் உடனடியாக உதவ வேண்டும் என்று ராகுல் நேற்று கூறியிருந்தார்.
மேலும், வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தன்னால் இயன்ற உதவிகளை செய்வதாகவும் ராகுல் உறுதி அளித்திருந்தார்.