மேட்டூர் அணைக்கான நீர்வரத்து இன்று இரவு 1.50 லட்சம் கன அடியை எட்டும் என மத்திய ஜல்சக்தி அமைச்சகம் தெரிவித்துள்ளது.
காவிரி நீர்ப் பிடிப்புப் பகுதிகளில் கடந்த சில நாள்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. குடகு மாவட்டத்தில் பாகமண்டலா, சோம்வார்பேட்டை, மாதபுரா, ஷிராளி உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் கிருஷ்ணராஜ சாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. மேலும், கபினி அணைக்கும் நீர்வரத்து அதிகரித்துள்ளது.
இதன் காரணமாக, கிருஷ்ணராஜசாகர், கபினி அணைகளில் இருந்து தமிழகத்துக்கு கூடுதல் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. தற்போது கர்நாடக அணைகளில் இருந்து காவிரியில் திறந்துவிடப்படும் தண்ணீர் 2.21 லட்சம் கன அடியை எட்டியுள்ளது. இது மேலும் அதிகரிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், மேட்டூர் அணைக்கான நீர்வரத்து இன்று இரவு 1.50 லட்சம் கன அடியை எட்டும் என மத்திய ஜல்சக்தி அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மேலும் நாளை மாலைக்குள் மேட்டூர் அணை நீர்வரத்து 2.40 லட்சம் கன அடியை எட்டும் எனவும் அதில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால் மேட்டூர் அணை வரையிலான காவிரி கரையோர கிராமங்களுக்கு தொடர்ந்து வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.