உள்நாட்டில் தயாரிக்கப்படும் பாதுகாப்புத் தளவாடங்களை நட்பு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வருவதாக மத்திய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மேற்கு வங்கத் தலைநகர் கொல்கத்தாவில் "கனகலதா பருவா' என்ற அதிவிரைவு ரக ரோந்துக் கப்பலின் செயல்பாட்டை சனிக்கிழமை தொடங்கி வைத்து, பாதுகாப்புத் தளவாடங்கள் உற்பத்தித் துறை செயலர் அஜய் குமார் கூறியதாவது:
கடந்த 2018-19 ஆம் நிதியாண்டில் ரூ.80,000 கோடி மதிப்பிலான பாதுகாப்புத் தளவாடங்களை இந்தியா உற்பத்தி செய்தது. அவற்றுள் ரூ.11,000 கோடி மதிப்பிலான தளவாடங்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன.
அமெரிக்கா, மத்திய கிழக்கு நாடுகள், தெற்காசிய நாடுகள், தென்கிழக்கு ஆசிய நாடுகள், ஆப்பிரிக்க நாடுகள் உள்ளிட்டவற்றுக்கு பாதுகாப்புத் தளவாடங்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன.
பெரிய அளவிலான தளவாடங்களை ஏற்றுமதி செய்து வந்தாலும், பாதுகாப்புத் தளவாடங்களில் பயன்படுத்தப்படும் கருவிகளின் ஏற்றுமதி அதிகரித்துள்ளது.
இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கருவிகளை உலக அளவில் சிறப்புவாய்ந்த நிறுவனங்கள் கூட கொள்முதல் செய்து வருகின்றன.
இதன்மூலம், உள்நாட்டுத் தளவாடங்களின் தேவையைப் பூர்த்தி செய்வது மட்டுமல்லாமல், உலக நாடுகளின் தேவையையும் பூர்த்தி செய்யும் அளவுக்கு நாட்டிலுள்ள பாதுகாப்புத் தளவாட உற்பத்தி நிறுவனங்கள் வளர்ச்சியடைந்துள்ளன.
போர்க் கப்பல்கள், போர் விமானங்கள், ஹெலிகாப்டர்கள், நீர்மூழ்கிக் கப்பல்கள், விமானம் தாங்கிக் கப்பல்கள் உள்ளிட்டவை தற்போது உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டு வருகின்றன.
அவற்றில் அதிநுட்பமான தொழில்நுட்பங்களைப் பயன்படுத்த அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தளவாட உற்பத்தி நிறுவனங்களின் திறனை அதிகரிக்கவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன என்றார் அஜய் குமார்.