கேரளத்தில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளில் சிக்கி இதுவரை 60 பேர் உயிரிழந்துள்ளனர் என்றும் அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
கேரளத்தில் தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளது. கனமழை தொடர்ந்து வருவதால், 80-க்கும் மேற்பட்ட இடங்களில் நிலச்சரிவுகள் ஏற்பட்டன; பெரும்பாலான நதிகளில் நீர்மட்டம் தொடர்ந்து அதிகரித்து வருவதால், தாழ்வான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. வெள்ளம் காரணமாக, மலப்புரம், கண்ணூர், இடுக்கி உள்ளிட்ட மாவட்டங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. மலப்புரம் மாவட்டம் கவளப்பாறையில் நிகழ்ந்த நிலச்சரிவில் சிக்கி பலியான 9 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.
மாநிலம் முழுவதுமுள்ள 1,111 நிவாரண முகாம்களில் 1.25 லட்சம் பேர் தங்கவைக்கப்பட்டுள்ளனர். தொடர்மழை காரணமாக மாநிலத்திலுள்ள அணைகளின் நீர்மட்டம் வேகமாக நிரம்பி வருவதால், அணைகள் எந்நேரத்திலும் திறக்கப்படலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ராணுவத்தினர், பேரிடர் மீட்புப் படையினர், காவல் துறையினர், தன்னார்வலர்கள் உள்ளிட்டோர் மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் கேரளத்தில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளில் சிக்கி இதுவரை 60 பேர் உயிரிழந்துள்ளனர் என்றும் அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் இன்று தெரிவித்துள்ளார்.
கேரளத்தில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் பெய்த பெருமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் 400-க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர்; 1 லட்சத்துக்கும் அதிகமானோர் வீடுகளை இழந்தனர். பல்வேறு தரப்பினரிடமிருந்து நிதியுதவி பெற்று, சிறிது சிறிதாக கேரளம் மீண்டு வந்த நிலையில், தற்போது பெய்து வரும் கனமழை மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.