மக்களவையில் தேசிய மருத்துவ ஆணைய மசோதா நிறைவேற்றப்பட்டதை கண்டித்து, பல்வேறு மாநிலங்களிலும் இந்திய மருத்துவர்கள் சங்கத்தை (ஐஎம்ஏ) சேர்ந்த மருத்துவர்கள் புதன்கிழமை வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேற்கு வங்க மாநிலத்தில் இந்தப் போராட்டத்தில் திரளான மருத்துவர்கள் கலந்து கொண்டனர். இதனால் மால்டா, முர்ஷீதாபாத், ஹூக்ளி உள்ளிட்ட இடங்களில் அரசு மருத்துவமனைகளில் மருத்துவ சேவைகள் பெரிதும் பாதிக்கப்பட்டன.
குஜராத் மாநிலத்தில் இந்த வேலை நிறுத்தப் போராட்டத்துக்கு 28 ஆயிரத்துக்கும் அதிகமான மருத்துவர்கள் ஆதரவு அளித்தனர். இதனால் மாநிலத்தின் பல இடங்களில் மருத்துவ சேவைகள் பாதிக்கப்பட்டன. ஆமதாபாதில் மட்டும் மருத்துவர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் கலந்து கொள்ளவில்லை. இதனால் அங்குள்ள அரசு மருத்துவமனையில் மருத்துவ சேவைகள் பாதிக்கப்படவில்லை.
தெலங்கானா மாநிலத்தில், 16,000 மருத்துவர்களும், 10,000 மருத்துவ மாணவர்களும் வேலைநிறுத்தப் போராட்டத்தில் கலந்து கொண்டனர். இதனால் அந்த மாநிலத்தில் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் புறநோயாளிகளுக்கான மருத்துவ சேவைகள் பாதிக்கப்பட்டன. அவசர சிகிச்சைப் பிரிவு மருத்துவர்களுக்கு வேலைநிறுத்தப் போராட்டத்தில் விதிவிலக்கு அளிக்கப்பட்டிருந்தது. இதனால் அவசர சிகிச்சை பிரிவு சேவைகளில் பாதிப்பு ஏற்படவில்லை.
இதேபோல், பல்வேறு மாநிலங்களிலும் இந்திய மருத்துவ சங்கத்தைச் சேர்ந்த மருத்துவர்களும், மருத்துவ மாணவர்களும் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்திய மருத்துவ கவுன்சிலுக்குப் பதிலாக தேசிய மருத்துவ ஆணையத்தை ஏற்படுத்தும் வகையில், மக்களவையில் தேசிய மருத்துவ ஆணைய மசோதா கடந்த திங்கள்கிழமை நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதாவுக்கு இந்திய மருத்துவர்கள் சங்கம் கடுமையாக எதிர்ப்புத் தெரிவித்து வருகிறது