நாடு முழுவதும் இன்று மக்களவைத் தேர்தலுக்கான 3ம் கட்ட தேர்தல் அமைதியான முறையில் தொடங்கி நடைபெற்று வருகிறது. 116 மக்களவை தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு தொடங்கியது.
பாஜகவின் தேசியச் செயலர் அமித் ஷா போட்டியிடும் காந்திநகர் தொகுதியிலும், காங்கிரஸ் தலைவர் ராகுல் போட்டியிடும் வயநாடு தொகுதியிலும் இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
மிகுந்த பாதுகாப்புடன் காஷ்மீரில் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. அசம்பாவிதங்களைத் தவிர்க்க காஷ்மீர் எல்லைப் பகுதியில் ரயில் சேவை நிறுத்தப்பட்டுள்ளது.
மெகபூபா முஃப்தியின் பேரவைத் தொகுதியான அனந்தநாக்கில் 3 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த வாக்குச்சாவடிகளில் 1903 வாக்காளர்கள் இடம்பெற்றுள்ளனர். ஆனால், இந்த வாக்குசாவடிகளில் மதியம் வரை வெறும் 5 வாக்காளர்கள் மட்டுமே வாக்களித்துள்ளனர். வெறிச்சோடி இருக்கும் வாக்குச்சாவடியில், வாக்காளர்களின் வருகைக்காக தேர்தல் அதிகாரிகள் காத்திருக்கிறார்கள்.
அகமதாபாத்தில் இன்று தனது வாக்கினை செலுத்திய பிரதமர் மோடி, டிவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது, பயங்கரவாதிகளிடம் இருக்கும் ஐஇடி - கண்ணிவெடிகுண்டை விடவும், வாக்காளர்களின் கையில் இருக்கும் வோட்டர் ஐடி எனப்படும் வாக்காளர் அடையாள அட்டை மிகவும் சக்தி வாய்ந்தது என்று தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.