அகமதாபாத்தில் உள்ள வாக்குச்சாவடியில் பிரதமர் மோடி தனது வாக்கை பதிவு செய்தார்.
மக்களவைக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. இரண்டு கட்ட வாக்குப்பதிவு ஏற்கனவே நடந்து முடிந்துள்ள நிலையில் குஜராத் உட்பட 13 மாநிலங்கள் மற்றும் 2 யூனியன் பிரதேசங்களுக்குட்பட்ட 117 தொகுதிகளில் இன்று காலை 7 மணிக்கு வாக்குப் பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் குஜராத் மாநிலம், காந்தி நகர் தொகுதிக்குட்பட்ட அகமதாபாத்தில் பிரதமர் மோடி தனது வாக்கினை பதிவு செய்தார். அவர் ராணிப்பில் உள்ள நிஸான் மேல்நிலைப்பள்ளி வாக்குச்சாவடியில் தனது ஜனநாயக கடமையை ஆற்றினார். முன்னதாக இன்று காலை குஜராத் வந்த பிரதமர் மோடி காந்திநகரில் வசிக்கும் தனது தாயை சந்தித்து ஆசி பெற்றார்.
காலில் விழுந்து ஆசி பெற்ற மோடிக்கு அவரது தாயார் ஹீரா பென் நெற்றியில் திலகமிட்டு வாழ்த்தினார். உத்தரப் பிரதேச மாநிலம், வாரணாசி மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் பிரதமர் மோடி குஜராத் மாநிலம், காந்தி நகர் தொகுதிக்குட்பட்ட அகமதாபாத்தில் வாக்களித்திருப்பது குறிப்பிடத்தது.