தனது தந்தை தேவெ கௌடா பிரதமராக இருந்த காலகட்டத்தில் நாட்டில் எந்த பயங்கரவாத தாக்குதலும் நடைபெறாமல் அமைதியாக இருந்ததாக கர்நாடக முதல்வர் குமாரசாமி கூறினார். இதுதொடர்பாக ஏஎன்ஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது:
எனது தந்தை தேவெ கௌடா பிரதமராக இருந்த 10 மாத காலம் ஜம்மு-காஷ்மீர் உட்பட நாட்டில் எந்த பயங்கரவாத தாக்குதலும் நடைபெறவில்லை. ஒட்டுமொத்த நாடும் அமைதியாக இருந்தது. இந்தியா, பாகிஸ்தான் இடையே எந்த பிரச்னையும் கிடையாது. ஆனால், பாலகோட் விமான தாக்குதல் மூலம் பிரதமர் மோடி அரசியல் ஆதாயம் தேடுகிறார். நரேந்திர மோடியின் 5 ஆண்டுகால ஆட்சியை விட எனது தந்தையின் 10 மாத கால ஆட்சியே சிறந்தது.
அமைதிக்கான அர்த்தம் என்னவென்று பிரதமர் மோடிக்கு தெரியாது. தனது அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்துகிறார். இந்த நாட்டில் பல பிரமதர்கள் ஆட்சி செய்துள்ளனர். இந்தியா, பாகிஸ்தான் இடையே பலமுறை பிரச்னை ஏற்பட்டுள்ளது. ஆனால், அதையெல்லாம் யாரும் தனது சுய அரசியல் ஆதாயங்களுக்காக பயன்படுத்தியதில்லை.
நான் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்ததை மக்கள் வரவேற்றுள்ளனர். அதேபோன்று நாளை காங்கிரஸ் ஆட்சியமைத்தால் ராகுலும் தேவே கௌடா போன்று சிறந்த நிர்வாகியாக இருக்க வேண்டும் என்று அறிவுறுத்துவேன். ஏனென்றால் தேவெ கௌடா சிறந்த நிர்வாகி, நல்ல மனிதர், அனுபவமிக்கவர், அரசியலில் அனைவரை விடவும் சிறந்தவர், அவர் ராகுலை ஏற்கனவே பிரதமர் வேட்பாளராக அறிவித்துவிட்டார். மேலும் அவர் தனது அரசியல் அனுபவத்தை ராகுலிடம் அறிவுறுத்துவதாகவும் தெரிவித்துவிட்டார்.
இந்த தேர்தலுடன் பாஜக அரசு வீழ்வது உறுதி. அனைத்து மாநில கட்சிகளின் ஆதரவுடன் மத்தியில் ராகுல் தலைமையில் ஆட்சி அமையும். அந்த அரசை தேவெ கௌடா நிச்சயம் சிறப்பாக வழிநடத்துவார் என்று தெரிவித்தார்.