நரேந்திர மோடி மீண்டும் பிரதமராவது உறுதி என்று மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
தென் பெங்களூரு மக்களவைத் தொகுதியில் உள்ள ஜெயநகர் 4-வது பிளாக்கில் வியாழக்கிழமை வாக்களித்த அவர், பின்னர் செய்தியாளர்களிடம் கூறியது:
மக்களவைத் தேர்தலில் பாஜக வேட்பாளர்கள் அதிகத் தொகுதிகளில் அறுதி பெரும்பான்மை பெற்று வெற்றி பெறுவது நிச்சயம். இதன் மூலம் பிரதமர் நரேந்திர மோடி மீண்டும் பிரதமர் ஆவது உறுதியாகியுள்ளது. இந்த மக்களவைத் தேர்தலில் இளைஞர்கள், முதியவர்கள், முதல்முறையாக வாக்களிப்பவர்கள் உள்பட அனைவரும் ஆர்வமாக வாக்குச்சாவடிகளுக்கு வந்து வாக்களிப்பது மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஊடகங்கள் என்ன கூறினாலும், மக்களிடம் உள்ள ஆர்வம் எங்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. எதிர்க்கட்சிகள் பெரிய கூட்டணி அமைத்தாலும், அவர்களுக்கு மக்கள் ஆதரவு தரவில்லை. நிரந்தரமாக ஆட்சி அளிப்பவர்களையே மக்கள் விரும்புகின்றனர். காங்கிரஸ் கூட்டணியால் நிரந்தரமான ஆட்சியை அளிப்பது சாத்தியமில்லை என்பதை மக்கள் உணர்ந்துள்ளனர். மத்தியில் நேர்மையான, நிரந்தரமான ஆட்சியை பாஜக வழங்கி வருகிறது. தொடர்ந்து வழங்கும் என்றார் அவர்.