கர்நாடகத்தில் முதல்கட்டத் தேர்தல் நடைபெற்ற 14 தொகுதிகளில் 10 இடங்களை காங்கிரஸ்-மஜத கூட்டணி கைப்பற்றும் என்று முன்னாள் பிரதமர் எச்.டி.தேவெ கெளடா தெரிவித்தார்.
கர்நாடக மாநிலம், ஹாசன் மாவட்டம், ஹொலேநரசிப்புரா வட்டம், படவலாஹிப்பே கிராமத்தில் வியாழக்கிழமை தனது குடும்பத்தினருடன் சென்று வாக்களித்த பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியது:
கர்நாடகத்தில் முதல் கட்டமாக 14 தொகுதிகளில் மக்களவைத் தேர்தல் நடைபெறுகிறது. இதில் மண்டியா, மைசூரு, ஹாசன், தும்கூரு, சிக்பள்ளாபூரு, கோலார் உள்பட 10 தொகுதிகளில் காங்கிரஸ், மஜத கூட்டணி வெற்றி பெறும். அதேபோல, மாநிலத்தில் உள்ள 28 தொகுதிகளில் 20 தொகுதிகளில் காங்கிரஸ், மஜத கூட்டணி வெற்றி பெறும் என்பதில் சந்தேகமில்லை.
பிரதமர் மோடி கர்நாடகத்தில் தான் கலந்து கொள்ளும் பிரசாரக் கூட்டங்களில் காங்கிரஸ், மஜத கூட்டணி அரசை 20 சத கமிஷன் வாங்கும் அரசு என்று குற்றம்சாட்டி வருகிறார். பிரதமர் பதவி வகிக்கும் அவருக்கு இதுபோன்ற ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளைக் கூறுவது அழகு தராது என்பதனை உணர வேண்டும். மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெற்று, மத்தியில் ஆட்சியைப் பிடிக்க உள்ளன. இதன் மூலம் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பிரதமர் ஆக உள்ளார்.
பிரதமர் மோடியின் ஆட்சியால் வேதனையடைந்துள்ள
மக்கள் அவரை ஆட்சியிலிருந்து கீழே இறக்க முடிவு செய்துள்ளனர். இது மக்களவைத் தேர்தல் முடிவில் எதிரொலிக்கும் என்றார் அவர்.