அவ்வப்போது ஒப்பனை செய்துகொள்வதால் தான் பிரதமர் நரேந்திர மோடி ஜொலிப்பதாக கர்நாடக முதல்வர் குமாரசாமி கூறினார். இதுதொடர்பாக அவர் கூறுகையில்,
தற்போது தேர்தல் நடைபெறும் சூழலில் நாளொன்றுக்கு 3 முதல் 4 தேர்தல் பிரசாரக் கூட்டங்களில் பிரதமர் மோடி பேசுகிறார். ஆனால், அவரது முகம் எப்போதும் பிரகாசமாக இருப்பது அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி வருகிறது. ஏனென்றால், நாம் அனைவரும் காலை குளித்த பிறகு மறுநாள் தான் முகம் கழுவுவோம். அதனால் தான் நமது முகம் கேமரா முன்பு நன்றாக இருப்பதில்லை.
ஆனால், பிரதமர் மோடி காலையிலேயே ஒப்பனை செய்துகொண்டு கேமரா முன்பு அமர்ந்துகொள்வார். இதனால் அவரது முகம் பொலிவுடன் இருப்பதால், கேமராக்களும், ஊடகங்களும் அவரை மட்டுமே படம்பிடிக்கின்றன.
கட்சியினர் யாரும் பாஜக-வுக்காக வாக்கு சேகரிப்பதில்லை. அவர்களும் மோடிக்காக மட்டுமே வாக்கு சேகரிக்கின்றனர். இதனால் அந்த கட்சியின் ஜனநாயகம் முற்றிலும் சிதைந்துவிட்டது. தாமரைக்கு வாக்கு சேகரிக்கும் மோடி, கர்நாடகத்துக்காக எந்த நன்மையும் செய்தது கிடையாது என்றார்.