பிரதமர் மோடியின் மாய வார்த்தைகளை நம்ப வேண்டாம் என உங்களிடம் கேட்டுக்கொள்கிறேன் என்று கர்நாடக முதல்வர் குமாரசாமி கோரிக்கை வைத்தார். இதுதொடர்பாக தேர்தல் பிரசாரத்தின்போது அவர் பேசியதாவது:
வருமானவரித்துறை மற்றும் தேர்தல் அதிகாரிகள் தொடர்ந்து திட்டமிட்டு என் மீது பழிவாங்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். நமது நட்பு நாடுகளுடன் தேவையில்லாத பகையை மத்திய அரசு உருவாக்கி வருகிறது. மக்களவைத் தேர்தலை முன்னிட்டு சில திட்டமிட்ட செயல்களில் பிரதமர் மோடி ஈடுபடவுள்ளதாக கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பே ஒரு ராணுவ அதிகாரி என்னிடம் தெரிவித்தார்.
வளர்ச்சியை முன்வைத்து பாஜக வாக்கு சேகரிக்கவில்லை என்பதை நீங்கள் நினைவில் கொள்ள வேண்டும். எனவே பிரதமர் மோடியின் மாய வார்த்தைகளை நம்ப வேண்டாம் என உங்களிடம் கேட்டுக்கொள்கிறேன் என்றார்.
மேலும், கடந்த 2 நாட்களில் மட்டும் தேர்தல் அதிகாரிகளால் தன்னுடைய கார் 14 முறை சோதிக்கப்பட்டுள்ளதாகவும், அதிலும் வியாழக்கிழமை அன்று 60 கிலோ மீட்டர் தொலைவுக்குள் 2 முறை சோதிக்கப்பட்டதாகவும் குமாரசாமி குற்றம்சாட்டினார்.