அரசியல் ரீதியாக முரண்படுபவர்களை பாஜக ஒருபோதும் தேச விரோதிகள், எதிரிகள் என குறிப்பிட்டதில்லை என்று பாஜக மூத்த தலைவர் எல்.கே. அத்வானி தெரிவித்துள்ளார்.
பாஜக தோன்றிய தினமான ஏப்ரல்-6 ஐ முன்னிட்டு, அக்கட்சியின் மூத்த தலைவர் அத்வானி வலைப்பதிவில் தெரிவிக்கையில்,
"இந்திய ஜனநாயகத்தின் சாராம்சமே, பன்முகத்தன்மை மற்றும் கருத்துச் சுதந்திரத்துக்கு மதிப்பளிப்பதாகும். ஆரம்பத்தில் இருந்தே, பாஜக அரசியல் ரீதியாக முரண்படுபவர்களை ஒருபோதும் எதிரிகளாக கருதியதில்லை.
அதேபோல் தேசப்பற்று குறித்த எங்களது பார்வையில், நாங்கள் ஒருபோதும் முரண்படுபவர்களை தேச விரோதிகள் என்று கருதியதில்லை. அவர்களை எதிர் தரப்பில் உள்ளவர்களாகவே பார்த்திருக்கிறோம்" என்றார்.
பாஜகவை நிறுவிய தலைவர்களுள் மிக முக்கியமான தலைவர் அத்வானி. அவர் இந்த கருத்தை தற்போது தெரிவித்திருப்பது முக்கியத்துவம் பெறுகிறது. காரணம், அமித்ஷா மற்றும் மோடி தலைமையிலான பாஜக பொதுத் தேர்தல் நேரத்தில் தேசத்தின் பாதுகாப்பை கருவியாக பயன்படுத்தி வருகிறது. எதிர்க்கட்சிகள் இந்தியாவின் எதிரி நாடான பாகிஸ்தான் தொனியில் பேசுகிறது என்று அமித்ஷா மற்றும் மோடி தலைமையிலான பாஜக விமரிசனம் செய்கிறது. எதிர்க்கட்சித் தலைவர்களை தாக்குவதற்கு தேச விரோதிகள் என்ற சொல்லை பாஜக தலைவர்கள் அடிக்கடி பயன்படுத்துகின்றனர்.
அதனால், அத்வானியின் கருத்து தற்போது கவனத்தை பெறுகிறது.
ஏற்கெனவே, பாஜக வேட்பாளர்கள் அறிவிப்பில் அத்வானி பெயர் இடம்பெறாததும், அவரது தொகுதியான காந்திநகர் தொகுதியில் அமித்ஷா போட்டியிடுவதும் அரசியல் களத்தில் சற்று சலசலப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.