எம்.எல்.ஏ.,-க்களை இழுக்க பாஜக 25 கோடி பேரம்: முதல்வர் குமாரசாமி பரபரப்பு குற்றச்சாட்டு

காங்கிரஸ் மற்றும் மஜத எம்.எல்.ஏ.,-க்களை தங்கள் பக்கம் இழுப்பதற்காக பாஜக ரூ.25 கோடி 30 கோடி வரை பேரம் பேசியதாக முதல்வர்
எம்.எல்.ஏ.,-க்களை இழுக்க பாஜக 25 கோடி பேரம்: முதல்வர் குமாரசாமி பரபரப்பு குற்றச்சாட்டு

பெங்களூரு: காங்கிரஸ் மற்றும் மஜத எம்.எல்.ஏ.,-க்களை தங்கள் பக்கம் இழுப்பதற்காக பாஜக ரூ.25 கோடி 30 கோடி வரை பேரம் பேசியதாக முதல்வர் குமாரசாமி குற்றச்சாட்டி உள்ளார்.

கர்நாடகத்தில் சிவமொக்கா, பெல்லாரி, மண்டியா ஆகிய 3 மக்களவைத் தொகுதிகள், ராமநகரம், ஜம்கண்டி ஆகிய 2 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் சனிக்கிழமை (நவ.3) அமைதியாக நடந்து முடிந்தது. இதில் சராசரியாக 65.57 சதவீத வாக்குகள் பதிவாகியிருந்தன. இடைத்தேர்தலில் பதிவு செய்யப்பட்ட வாக்குகள் பெல்லாரி, சிவமொக்கா, மண்டியா, ஜம்கண்டி, ராமநகரத்தில் உள்ள கல்லூரிகளில் பாதுகாப்பாக வைக்கப்பட்டன. 

இத் தேர்தலில் காங்கிரஸ் மற்றும் மஜத கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிட்டன. இந்தக் கூட்டணியை எதிர்த்து முக்கியக் கட்சியாக பாஜக மட்டுமே களத்தில் இருந்தது.

பதிவாகியுள்ள வாக்குகள் இன்று நவ.6-ஆம் தேதி காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வந்த வாக்கு எண்ணிக்கையின் முடிவில், 2 மக்களவைத் தொகுதிகளிலும், 2 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் காங்கிரஸ், மஜத கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. ஒரு மக்களவைத் தொகுதியில் மட்டும் பாஜக வெற்றிபெற்றுள்ளது.

ஷிமோகா மக்களவைத் தொகுதியில் பாஜக வேட்பாளரும், முன்னாள் முதல்வர் எடியூரப்பாவின் மகனுமான பி.ஒய்.ராகவேந்திரா, 47 ஆயிரத்து 388 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளார். 

ராம்நகர் சட்டப்பேரவைத் தொகுதியில், மஜத வேட்பாளரும், முதல்வர் குமாரசாமியின் மனைவியுமான அனிதா 1 லட்சத்து 9 ஆயிரத்து 137 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். 

இந்நிலையில், இடைத்தேர்தல் வெற்றி குறித்து முதல்வர் குமாரசாமி செய்தியாளர்களிடம் பேசுகையில், மக்கள் தங்கள் மீது வைத்துள்ள நம்பிக்கையை இடைத்தேர்தல் முடிவுகள் வெளிப்படுத்துவதாகவும், கூட்டணி தொடர்பான பாஜகவின் குற்றச்சாட்டை மக்கள் நிராகரித்துள்ளதை எடுத்துக்காட்டுகிறது. இந்த வெற்றியால் அத்துமீறி செயல்படுபவர்களாக மாறமாட்டோம் என கூறினார். 

மேலும், காங்கிரஸ் மற்றும் மஜத எம்.எல்.ஏக்களை தங்கள் பக்கம் இழுக்க பாஜக ரூ.25 கோடி 30 கோடி வரை பேரம் பேசியதாகவும், ஆனால் யாரும் அவர்கள் பக்கம் செல்லவில்லை என முதல்வர் குமாரசாமி கூறினார். 

எங்களின் அடுத்த இலக்கு வரும் 2019 மக்களவைத் தேர்தலின்போது 28 தொகுதிகளில் வெற்றி பெறுவதே என்றும், அதன் முதல் படிதான் இந்த வெற்றி என கூறினார். 

கர்நாடக காங்கிரஸ் தலைவர் தினேஷ் குண்டு ராவ் கூறுகையில், மக்கள் பாஜவை நிராகரித்துவிட்டதாகவும், நரேந்திர மோடி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசை நிராகரித்துள்ளது. கர்நாடக இடைத்தேர்தல் முடிவு நாடு முழுவதற்கும் பாஜகவுக்கு எதிரான ஒரு செய்தியை கொண்டு செல்லும் என தெரிவித்தார். 

அமைச்சர் டி.கே.சிவக்குமார் கூறுகையில், மக்கள் ஆணையம் மிக முக்கியமானது, அது மக்களுக்கு வழிகாட்டுதலாகும் என்றும் தென்னிந்தியாவைப் பொறுத்தவரை, சமூக, பொருளாதார வளர்ச்சி, நிர்வாகத்திறன் ஆகியவற்றில் அவர்கள் பெறப்போகும் பயன் மற்றும் வெளிப்படைத்தன்மையை பார்த்தே மக்கள் வாக்களிக்கின்றனர். ராமர்கோவில் போன்ற விவகாரங்களை அரசியலாக்குவது எடுபடாது என அமைச்சர் டி.கே.சிவக்குமார் தெரிவித்துள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com