புவனேஸ்வர்: அணு ஆயுதங்களை சுமந்தபடி 5 ஆயிரம் கிலோமீட்டர் தூரம் வரை பறந்து சென்று குறிப்பிட்ட இலக்கை துல்லியமாக தாக்கும் ‘அக்னி-5’ ரக ஏவுகணை திங்களன்று வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது.
இந்திய பாதுகாப்புத்துறை ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனமானது 1.5 டன் எடையை சுமந்துச் செல்லக்கூடிய வகையில் அமைந்த, 17 மீட்டர் நீளம், 2 மீட்டர் அகலம் கொண்ட ‘அக்னி–5’ ரக ஏவுகணைகளை தயாரித்து வருகிறது.
அணு ஆயுதங்களை தாங்கிச் சென்று எதிரிகளின் குறிப்பிட்ட இலக்குகளை அழிக்கும் இந்த ‘அக்னி–5’ ஏவுகணைகள், சுமார் 5 ஆயிரம் கிலோமீட்டர் தூரம் வரை, கண்டம் விட்டு கண்டம் பாய்ந்துச் சென்று தாக்கும் வகையில் இந்த ஏவுகணைகள் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் அணு ஆயுதங்களை சுமந்தபடி 5 ஆயிரம் கிலோமீட்டர் தூரம் வரை பறந்து சென்று குறிப்பிட்ட இலக்கை துல்லியமாக தாக்கும் ‘அக்னி-5’ ரக ஏவுகணை திங்களன்று வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது.
ஒடிசாவின் பாலசோர் கடற்கரை பகுதியை ஒட்டியுள்ள அப்துல் கலாம் தீவில் இருந்து திங்கள் பிற்பகல் ‘அக்னி–5’ ஏவுகணை பரிசோதிக்கப்பட்டது.
இந்த சோதனை வெற்றிகரமாக அமைந்ததாக பாதுகாப்புத்துறை ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் தெரிவித்துள்ளது.