'ஒரே டென்ஷன்', 'டிப்ரெஷனா இருக்கு', 'ஓவர் ஸ்ட்ரெஸ்’ - இது போன்ற வார்த்தைகளை கிட்டத்தட்ட அனைவருமே பயன்படுத்தும் அளவுக்கு சூழல் உள்ளது. இதற்குக் காரணம் வாழ்நிலை மாற்றங்கள் மட்டுமல்ல, மனதையும் உடலையும் கையாளத் தெரியாத நிலைதான். நமக்கே தெரியாமல் நம் உடலில் மட்டுமல்ல மனதிலும் பலவிதமான டாக்ஸின்கள் (நச்சு) சேர்ந்து அடி ஆழம் வரை படிந்துவிடுகின்றன. இதை எப்படி போக்குவது? நோகாமல் ஒரு வழி இருக்கிறது என்றால் அதை உடனே கடைபிடிக்க விரும்புவோம் அல்லவா? இதோ ஒரு ஈஸி தியானம். தினமும் இந்த தியானத்தை இரண்டு முறை செய்தால் மனம் ரிலாக்ஸ் ஆகி, உடல் பிரச்னைகள் கூட தீர்ந்துவிடும்.
ஹிப்னோ தியானம் - இதுதான் அந்த எளிமையான தீர்வு. உடலின் இறுக்கத்தை நீக்கி, தேவையான அளவு தளர்வை உருவாக்கி, மனதின் அழுத்தத்தை நீக்கி அமைதியையும் உருவாக்க வல்லது இந்த தியானம். இதனை உடல் தளர்வுப் பயிற்சி என்றும் சொல்லலாம். சாப்பிடுவதற்கு அரை மணி நேரம் முன்பு அல்லது சாப்பிட்டிருந்தால் இரண்டு மணி நேரம் கழித்துதான் இதனை செய்ய வேண்டும்.
அமைதியான ஒரு இடத்தைத் தேர்ந்தெடுத்து அமர்ந்து கொள்ளுங்கள். கண்களை மூடி அமர்ந்திருக்கவும். உங்கள் மனதில் பலவிதமான எண்ணங்கள் ஏற்படும். மெல்ல, உள்ளங்காலில் தொடங்கி உச்சந்தலை வரை உடலிலுள்ள எல்லா உறுப்புகளை மனதில் நினைத்து, அவை ஒவ்வொன்றும் ஓய்வு பெறுவதாகக் கற்பனை செய்யவும். இவ்வாறு செய்யும் போது அந்தந்த உறுப்புக்களின் இறுக்கம் நீங்கி உடல் முழுவதும் ரிலாக்ஸ் ஆகும். யோகா செய்பவர்கள் கடைசியில் சவாசனம் செய்வது போன்றுதான் இந்த தியானமும். சவாசனம் படுத்துக் கொண்டு செய்வார்கள். ஹிப்னோ நீங்கள் விரும்பியபடி அமர்ந்த நிலையிலோ அல்லது படுத்துக் கொண்டோ செய்யலாம்.
ஹிப்னோ தியானம் செய்யும் போது மூளையில் உள்ள மின்காந்த அலைகளின் (EEG) வேகம் குறைந்து, மனம் அமைதியும் ஆனந்தமும் அடையும். அப்போது செரட்டோன் ஹார்மோன் சுரந்து மகிழ்ச்சியை தூண்டும். இந்தப் பயிற்சியை நமக்கு நாமே செய்யலாம் அல்லது அமைதியான இடத்தைத் தேர்ந்தெடுத்து யாராவது சொல்லச் சொல்ல தியானம் செய்தால் கூட பலன் கிடைக்கும்.