பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை குறித்த பொதுமக்களின் எதிர்வினை

அண்மையில் ஊடகங்களில் பரவலாக விவாதிக்கப்பட்டு வரும் பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை குறித்த பொதுமக்களின் எதிர்வினை
பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை குறித்த பொதுமக்களின் எதிர்வினை

அண்மையில் ஊடகங்களில் பரவலாக விவாதிக்கப்பட்டு வரும் பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை குறித்த பொதுமக்களின் எதிர்வினை, ஆறுதல் அளிக்கக் கூடியதாகவும் நம்பிக்கை அளிக்கக் கூடியதாகவும் இருக்கின்றது. 

பெண்களிடம் நம்பிக்கை அடிப்படையில், நட்பின் அடிப்படையில் பழகி அவர்களைப் பாலியல்ரீதியாகக் கொடுமைப்படுத்தி, மிரட்டி, பணம் பறித்த அந்தப் பொள்ளாச்சி இளைஞர்கள் கடுமையாகத் தண்டிக்கப்பட வேண்டும் என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்தில்லை. இது குறித்து தற்சமயம் தமிழகத்திற்கு வந்திருக்கும் சர்வதேச தமிழ் மரபு அறக்கட்டளையின் தலைவரான முனைவர் க.சுபாஷிணி கூறியதாவது:

'சமூகத்திலும் குடும்பத்திலும் அம்மா, பாட்டி, அத்தை, சகோதரி, தோழி என பெண்களோடு பிறந்து பெண்களோடு வாழ்ந்தாலும் கூட நட்புடன் பழகிய பெண்களை நம்பிக்கை மோசடி செய்து மனிதப் பண்பை இவர்கள் மீறியிருக்கின்றனர். பொள்ளாச்சி வழக்கறிஞர்கள் சங்கம் இந்தப் பாலியல் குற்றவாளிகளுக்கு ஆதரவாக நீதிமன்றத்தில் ஆஜராக மாட்டோம் என்று தீர்மானம் நிறைவேற்றியுள்ளதைத் தமிழ் மரபு அறக்கட்டளை வரவேற்கின்றது. அதே நேரத்தில் தமிழகத்தின் பிற பகுதியில் இருக்கின்ற எல்லா வழக்கறிஞர்கள் சங்கமும்

இந்த தீர்மானத்தைப் பின்பற்ற வேண்டும் என்றும் யாரும் இவர்களைக் காப்பாற்றும் நோக்கத்துடன் வழக்காடக் கூடாது. 

அதே நேரத்தில் தேசிய பெண்கள் ஆணையம் இந்த வழக்கை தானாக முன் வந்து எடுத்துக் கொண்டுள்ளது நம்பிக்கையளிக்கின்றது. இந்த ஆணையத்திடம் அளிக்கப்படும் புகார்கள் ரகசியமாகப் பாதுகாக்கப்படும் என இந்த அமைப்புக் கூறியுள்ளதால் பாதிக்கப்பட்ட பெண்கள் தைரியமாக முன் வந்து புகார்களைப் பதிவு செய்து குற்றவாளிகளைத் தப்ப விடாமல் இருக்க முன் வரவேண்டும். மேலும் பாலியல் தொடர்பாக உள்ள கற்பிதங்களில் சிக்காமல், இது தங்களது தனிப்பட்ட உரிமை என்று பெண்கள் நினைக்கும்போது மட்டும் தான் இதுபோன்ற கொடூரமான பாலியல் மோசடிகளுக்கு எதிராகப் போராட முடியும். அதே நேரத்தில் இது பிற பெண்களுக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்த முடியும். 

பெண்கள் தங்களுடைய முழுமையான வாழ்க்கை என்பது 'உடல்' சார்ந்தது மட்டுமே என்று எண்ணி விடக் கூடாது. அப்படி எண்ணினால் அது பாலியல் சுரண்டல்வாதிகளுக்கு வாய்ப்பாக அமைந்துவிடும். எனவே பெண்களின் தைரியம் மட்டுமே இது போன்ற கடினமான சூழலை எதிர்கொள்ள முடியும். பெற்றோரிடம் ஆண் நண்பர்கள் குறித்து சொல்வதும், முகநூலில் தெரிந்தவர்களுடன் மட்டும் நட்பு வைத்துக் கொள்வதும், யாராவது வரம்பு மீறி செய்திகள் அனுப்பும் போது அவரது நட்பிற்கு முற்றுப்புள்ளி வைப்பதும் ஏடாகூடமாக மாறுவதை தடுக்கும் எச்சரிக்கை நடவடிக்கையாகும்' என்கிறார் 
- சுதந்திரன்
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com