மணிக்கட்டிலிருந்து கட்டைவிரல் வரை வலி

தாஜ்மஹால், சீனப்பெருஞ்சுவர் உட்பட உலகின் எந்த அதிசயமும் கட்டைவிரல் இல்லாமல் உருவாக முடியாது.
மணிக்கட்டிலிருந்து கட்டைவிரல் வரை வலி

தாஜ்மஹால், சீனப்பெருஞ்சுவர் உட்பட உலகின் எந்த அதிசயமும் கட்டைவிரல் இல்லாமல் உருவாக முடியாது. மனிதனின் உணர்வுடன் கூடிய உழைப்பிற்கு வடிவம் தரக் கூடியது கட்டைவிரல். மகாபாரதத்தில் போர்க்கலை வித்தைகளைக் கற்றுத்தேர்ந்த, தாழ்த்தப்பட்ட இனத்தைச் சேர்ந்த ஏகலைவன் குருதட்சணை என்ற பெயரில் உயர்ஜாதி ஆதிக்கத்திற்குக் கட்டை விரலைக் காணிக்கையாகக் கொடுத்தான். 

பாரதத்தில் நேர்த்தியான கைத்தறி நெசவு காரணமாக அன்னியத் துணிகளை விரிவாக விற்பனை செய்வது பாதிக்கப்பட்டது. இதனால் ஆயிரக்கணக்கான நெசவாளர்களின் கட்டை விரல்கள் பிரிட்டிஷ் கொடுங்கோலர்களால் மனிதாபிமானமின்றி துண்டிக்கப்பட்டதை இந்திய சரித்திரத்தின் பக்கங்களில் ரத்தக்கறையுடன் பதிவு செய்யப்பட்டுள்ளது. மனிதனின் லட்சியக் கனவுகள் எல்லாம் கட்டைவிரல் இல்லாமல் நனவாக முடியுமா?

கட்டைவிரலில் வலிக்கிறது’ என்று சிகிச்சைக்கு வந்தார் ஒருவர். இடதுகையை நீட்டி, மணிக்கட்டிலிருந்து கட்டைவிரல் வரை வலி இருப்பதாகச் சுட்டிக்காட்டினார். வலியின் தன்மை, அதிகரிப்பு - குறைதல் குறித்த விவரம், இதரக் குறிகள் எல்லாம் விசாரித்தேன். ‘வேறு எந்தப் பிரச்சனையுமில்லை; இரண்டு, மூன்று மாதமாக இந்த வலி ஒன்றுதான் பிரச்சனை’ என்று சுருக்கமாகப் பதிலளித்தார். ஓரளவு கூட அவரைப் பற்றிய புரிதல் ஏற்படாமல் அவருக்குச் சிகிச்சையளிக்க வேண்டிய இக்கட்டான நிலை. 

ஓரிரு நிமிட இடைவெளி கடந்து, ‘உங்களைப் பற்றிய விவரங்களையும் வலியுடன் சம்பந்தப்பட்ட வேறு விஷயங்களையும் நீங்கள் தெரியப்படுத்தினால் தான் உதவியாக இருக்கும்’ என்று கேட்டுக்கொண்டு, தாகம், நீர்,மலம், பசி... குறித்து விசாரித்தேன்.

மீண்டும் அவர் அழுத்தம் திருத்தமாக ‘வேறு எந்தப் பிரச்னையும் இல்லை; இந்த வலி ஒன்றுதான் பிரச்சனை என்று கூறியதையே கூறிமுடித்தார். சிகிச்சைக் குறிப்புகள் நூல்களில் ஒன்றிரண்டைப் பார்த்துவிட்டு மருந்து கொடுத்தனுப்பினேன்.

ஒருவாரம் கழித்து வந்தபோது, ‘ஒரளவு மட்டும் வலி குறைந்துள்ளது’ என்றார். மேலும் ஒருவார மருந்து தரப்பட்டது. தொடர்ந்து மூன்றாவது வாரமும் மருந்தளிக்கப்பட்டது. நான்காவது வாரம் அவர் மீண்டும் வந்தபோது முகம் சற்று வாடியிருந்தது. ‘வலி எப்படி உள்ளது?’ என்று விசாரித்தேன். ‘முதல் வாரம் வலி குறைந்தது; இரண்டாவது வாரம் மேலும் கொஞ்சம் வலி குறைந்தது. இப்போது மூன்றாவது வாரம் மருந்து சாப்பிட்டபின் வலி மீண்டும் வந்து விட்டது. அது மட்டுமில்லாமல் இரவு தூக்கத்திலேயே சிறுநீர் கழித்து ஆடையும் படுக்கையும் பாழாகி விடுகிறது என்று குறிப்பிட்டார்.

‘இதுபோல் இதற்குமுன்னர் தன்னையறியாமல் சிறுநீர் கழிக்கும் நிலை ஏற்பட்ட துண்டா?,’ என்று கேட்டபோது ‘இல்லையே! இப்போது சிலநாளாகத் தான் அப்படி உள்ளது. கொஞ்ச நாளாக கனவில் சிறுநீர்கழிப்பது போல் தோன்றும். ஆனால் தற்போது அந்த மாதிரிக் கனவு ஏற்படும்போது நிஜமாகவே சிறுநீரும் வெளிவந்து விடுகிறது’ என்றார்.

அவருக்கு மீண்டும் பழைய மருந்து தரவில்லை. கனவுக் குறியை மையமாகக் கொண்டு கிரியோசோட்டம் என்ற ஹோமியோபதி மருந்து தேர்வு செய்து கொடுத்தனுப்பினேன்.

அதன் பின்னர் அவர் நீண்டநாள் வரவேயில்லை. ஒருநாள் அவரது உறவுக்காரப் பெண்ணுக்குச் சிகிச்சை பெற அழைத்து வந்திருந்தபோது ‘கடைசியாக நீங்கள் எனக்குக் கொடுத்த மருந்தில் கையிலிருந்த வலி மறைந்துவிட்டது. இரவு உறக்கத்தில் சிறுநீர் கழிப்பதும் நின்றுவிட்டது’ என்று சொல்லிவிட்டு உறவுக்காரப் பெண்ணை அறிமுகப்படுத்தத் துவங்கினார்.

மணிக்கட்டு நரம்பு முடிச்சு வீக்கம்-GANGLION

மணிக்கட்டின் மேற்பகுதியில் (Dorsal surface) காணப்படும் முண்டு போன்ற வீக்கம் நரம்பணுத்திரள் வீக்கம்  அல்லது நரம்பு முடிச்சு வீக்கம் எனப்படுகிறது. (போயரிக் இதனை An encysted tumour on a tendon எனக் கூறுகிறார்) இத்தகைய முண்டு வீக்கம் மணிக்கட்டின் மேல்புறத்திலோ  (on top of wrist), கீழ்ப்புறத்திலோ, விரல்கள் முடி வடையும் மூட்டுகளிலோ அரிதாக பாதங்களிலோ உருவாகக் கூடும். இது நோயின் விளைவாக தோன்றிய மெல்லிய சுவருள்ள திசுப் பை (cyst) இதனுள்ளே திரவச்சுரப்பு நிரம்பியிருக்கும். இது உருவாவதற்கான தெளிவான காரணம் இன்னும் தெரியவில்லை என்று அலோபதி மருத்துவம் குறிப்பிடுகிறது.

இந்த மணிக்கட்டு வீக்கம் பெரியளவில் காணப்பட்டால் வெளிப்படையாக எல்லோரும் பார்க்ககூடிய வகையிலும் விகாரமாகவும் தெரியும். தோல் பரப்பின் அடியில் சிறிய வடிவத்தில் அமைந்திருந்தால் பிறர் பார்வைக்குட்படாத போதிலும் வலியை ஏற்படுத்திக் கொண்டேயிருக்கும். சிலருக்கு இவ்வலி மணிக்கட்டுப் பகுதியில் (Localised)  மட்டும் நிற்கும் சிலருக்கு இவ்வலி கைவிரல்களிலோ, கையிலோ ஊடுருவிப் பரவி வேதனை தரும்.

ஆங்கில மருத்துவத்தில் இவ்வீக்கத்திலுள்ள திரவச் சுரப்பை நீக்க, வீக்கத்தை அகற்ற அறுவைச் சிகிச்சை (Gangilonectomy)  வரை மேற்கொள்ளப்படுகிறது. இருப்பினும் இச்சிகிச்சைக்குப் பிறகும் இவ்வீக்கம் மீண்டும் வர வாய்ப்புள்ளது. ஹோமியோபதி மருத்துவத்தின் அறுவைச் சிகிச்சை தவிர்க்கப்படுகிறது. சில பிரத்யேக மருந்துகளும், குணம் குறிகளுக்கேற்ற மருந்துகளும் பயன்படுத்தி நிலையான, நீடித்த பலனைப் பெற முடிகிறது. பக்க விளைவு இல்லாமல், கத்தியோ ஊசியோ காயப் படுத்தாமல், எதிர் உயிரி மருந்துகள் (Anitbiotics) இல்லாமல், உடம்பில் தழும்பு ஏற்படுத்தாமல் அகவயமான காரணங்களை அகற்றி வீக்கத்தை வற்றச் செய்து . நிரந்தர குணம் பெற முடிகிறது.

மணிக்கட்டு நரம்பணு முடிச்சு வீக்கத்திற்கும் பயன்படும் முக்கிய முன்று மருந்துகள் 1.ரூடா (Ruta) 2. பென் ஜாயிக் ஆசிட் (Ben-zonic Acid) 3. சிலிகா (Sililca). வீக்கத்துடன் வலியும் இணைந்து துயரப்படுத்தும் போது ரூடா உயர் வீரியம் அற்புதமான பலன் தருகிறது. இருப்பினும் ரூடா 30 மற்றும் 200C வீரியத்திலேயே விகிச்சையைத் துவங்கலாம். ஒரிரு வாரத்தில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் இல்லாவிட்டால் உயர் வீரியத்திற்கு சென்று பயன் பெறலாம். இவ்வீக்கத்தில் யூரியா அமிலத்தன்மை (Uricacid Diathesis) காணப்பட்டால் பென் ஜாயிக் ஆசிட் மருந்தும் கால்ஷியப் படிவங்கள் காணப்பட்டால் கல்கேரியாகார்ப் மருந்தும் தேவைப்படுகின்றன. மருத்துவர் கிளார்க் சல்பர் CM  வீரியத்தில் காலை நேரத்தில் ஒரு வேளை மருந்து மூலம் மூன்று வார காலத்தில் மணிக்கட்டு நரம்பு முடிச்சு வீக்கத்தைக் குணப்படுத்தலாம் என அனுபவச் சான்றுடன் சுட்டிக்காட்டுகிறார்.

Ganglion வீக்கத்தைக் குணப்படுத்த ரூடா. பென் ஜாயிக் ஆசிட், சலிகா, சல்பர், கல்கேரியாகார்ப் போன்ற  மருந்துகள் மட்டுமின்றி கல்கேரியா புளோர், தூஜா, பாஸ்பரஸ், ஆர்னிகா , ஸடிக்டா, நேட்ரம் மூர் போன்ற மருந்துகளும் உதவுகின்றன.

Dr.S.வெங்கடாசலம்

மாற்றுமருத்துவ நிபுணர்

சாத்தூர் Cell : 94431 45700

Mail : alltmed@gmail.com

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com