மலச்சிக்கல் ஏன் வருகிறது? யோசித்துப் பாருங்கள். நாம் தினம் உண்ணும் உணவுப்பொருட்கள் செரிமானமாகி மலக்குடல் வழியாக தினம் தினம் வெளியேறியாக வேண்டும். அப்படி வெளியேறாமல் சில நாட்கள் தங்கிப் போனால் என்ன ஆகும்? நாம் உண்ட உணவுகள் அனைத்துமே இரைப்பை மற்றும் குடல் பகுதியில் கட்டியாக அடைத்துக் கொள்ளும். பிறகு அதை இளக்கி வெளியேற்றுவது மிகப்பெரும் சிரமம். இதற்காக டல்கோலக்ஸ் மாத்திரைகளை பட்டை பட்டையாக வாங்கி வைத்துக் கொண்டு உண்ண வேண்டுமா என்ன? அப்படிச் செய்பவர்களும் இருக்கிறார்கள். ஆனால், அதெல்லாம் வீண் வேலை. மனித உடலானது உண்ட உணவுகளை இயற்கையிலேயே தானே செரிக்கச் செய்து மீண்டும் பசியைத் தூண்டும் வண்ணம் அமைந்தது தானே? பிறகெதற்கு நாம் கண்ட மருந்துகளையும் நாடுவது? இந்த இடத்தில் நாம் கவனித்தில் கொள்ள வேண்டியது ஒன்றே ஒன்று மட்டுமே!
அது என்னவென்றால்? தினமும் காலை எழுந்தவுடன் 1 டம்ளர் வெதுவெதுப்பான வெந்நீர் அருந்தி சற்று நேரம் நடைபயிற்சி மேற்கொண்டு விட்டு அதன் பிறகே நமது அன்றாட வேலைகளைத் துவக்குவது. என்பதே அது.
இந்த ஒரு பழக்கத்தை மட்டும் நாம் தவறாமல் மேற்கொண்டு வந்தோமென்றால் போதும் மலச்சிக்கலாவது? ஒன்றாவது? மிக எளிதாக இந்தப் பிரச்னையை நம்மால் தாண்டிச் செல்ல முடியும்.
இதைத் தவிர மலச்சிக்கலைத் தவிர்க்க மற்றுமொரு முக்கியமான உபாயம் நார்ச்சத்து மிகுந்த உணவுகளை அன்றாட மெனுவில் சேர்த்துக் கொள்வது.
எந்தெந்த உணவுப் பொருட்கள் அதாவது காய்கறி மற்றும் பழங்களில் நார்ச்சத்து அதிகமாக இருக்கிறதென்று இப்போது நாம் தெரிந்து கொள்வோம்.
நார்ச்சத்து மிகுந்த காய்கறிகள் & பழங்கள்!
கேரட்,
பீட்ரூட்...
முள்ளங்கி, நூல்கோல்...
தோசைக்காய் (மஞ்சள் நிறத்தில் உருண்டையாக சூப்பர் மார்க்கெட்டுகளில் கிடைக்கும்), டிண்டா (பச்சையாகத் தக்காளி மாதிரி சூப்பர் மார்கெட்டுகளில் கிடைக்குமே),
சவ் சவ், பீர்க்கங்காய், சுண்டைக்காய், அத்திக்காய், புடலங்காய், சுரைக்காய், முருங்கைக்காய், பீன்ஸ், அவரைக்காய், மீல்மேக்கர், கீரை வகைகள் அனைத்தும், இவை தவிர நட்ஸ் என்று சொல்லப்படக்கூடிய பாதாம், வால்நட், பிஸ்தா, முந்திரி உள்ளிட்ட கொட்டை வகைகளிலும்
பழங்கள் என்று எடுத்துக் கொண்டீர்களெனில் அனைத்துப் பழங்களிலுமே நார்ச்சத்து கொட்டிக் கிடக்கிறது என்றே சொல்லலாம்.
இதில் ஆப்பிள், மாதுளை, சப்போட்டா, கொய்யா, திராட்சை, தர்பூசணி, வாழைப்பழம், பலாப்பழம், மாம்பழம் என்று வித்தியாசமெல்லாம் இல்லை. இதிலிருக்கும் ஒரே ஒரு கஷ்டம் எல்லோராலும் எல்லாப் பழங்களையும் எல்லா நேரங்களிலும் வாங்கி உண்ண முடியாது என்பது மட்டும் தான். அதற்குத் தான் இருக்கவே இருக்கிறதே கொய்யாவும், வாழைப்பழங்களும். இது அனைவராலும் வாங்கி உண்ணமுடியக் கூடியவையே.
இதையாவது தினமும் மதிய உணவுடனோ அல்லது இரவு உணவுடனோ சேர்த்து உண்ணப் பழகிக் கொள்ள வேண்டும்.
இதையெல்லாம் நீங்கள் சரியாகப் பின்பற்றினீர்கள் என்றால் பிறகு ஏன் மலச்சிக்கல் வரப்போகிறது?!